லோக் சபா தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது... சொல்கிறார் டிடிவி. தினகரன்
தருமபுரி: ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது என்றார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக ஆட்சியர்களின் சாணக்கியத்தனம் செயல்படாது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது போகாத ஸ்டாலின் தற்போது கிராமங்களுக்கு செல்கிறார். 20 ரூபாய் டோக்கனுக்காக யாராவது ஓட்டு போடுவார்களா? என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.
அரசியலுக்காக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.