காவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..? முதலமைச்சருக்கு அன்புமணி கேள்வி
தருமபுரி: காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என 9 இடங்களில் முதலமைச்சர் உறுதியளித்த நிலையில், அதனை நிறைவேற்றாதது ஏன் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்று போற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.
கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்
முதல்வருக்கு கேள்வி
ரூ.14,000 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, தருமபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
காவிரி உபரிநீர்
தருமபுரி மாவட்டத்தில் 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகள் உள்ளன. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1230 நீர்நிலைகளிலும் நிரப்புவது தான் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும். இதன் மொத்த செலவு ரூ.650 கோடி மட்டும் தான். இது காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான செலவில் வெறும் 4.64% மட்டும் தான்.
பின் தங்கிய மாவட்டம்
மேலும் தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரைடு கலந்திருப்பதால் நிலத்தடி நீரை குடிக்கும் மக்கள் புளூரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் நோய் பாதிப்பு கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளது. ஒப்பீட்டளவில் தமிழகத்தின் எந்த மாவட்டத்தையும் விட தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும்.
வெளி மாநிலங்கள்
இந்த மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளும் இல்லாததால் 5 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் செல்கின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டங்களில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயம் செய்யப்படும் பரப்பு வேகமாக குறைந்து வருகிறது.
வாக்குறுதி என்னவானது?
2019-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து காவிரி உபரி நீர் பாசனத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் பழனிச்சாமி, மக்களவைத் தேர்தலின் போது தருமபுரி தொகுதியில் என்னை ஆதரித்து பரப்புரை செய்த போது, காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று 9 இடங்களில் உறுதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
மறைமுக குட்டு
பின்தங்கிக் கிடந்த எத்தனை மாவட்டங்கள் முன்னேறின என்பது தான் ஓர் ஆட்சியின் செயல்பாட்டை அளவிடுவதற்கான முக்கியக் காரணியாகும். தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்று போற்றப்படும். எனவே, தருமபுரி மாவட்டத்தை செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதலமைச்சர் பழனிச்சாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.