8 வழிச்சாலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யக் கூடாது என அரசிடம் வலியுறுத்துவோம்.. அன்புமணி
தருமபுரி: 8 வழிச்சாலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யக் கூடாது என அரசிடம் வலியுறுத்துவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்படுவதை விவசாயிகள் எதிர்த்தனர்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து... தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
வழக்கு
இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
முக்கியத்துவம்
8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும் அந்த திட்டத்தின் அரசாணையை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது. இந்த வழக்கை தொடுத்த அன்புமணி, தற்போது அதிமுக- பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருவதால் இதன் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அரசிடம் வலியுறுத்தல்
இந்த நிலையில் இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில் 8 வழிச்சாலை திட்டத்தின் தீர்ப்பால் அதிமுக - பாமக கூட்டணியில் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று அரசிடம் வலியுறுத்தப்படும்.
வெற்றி
சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவசாயிகளுக்கான வெற்றி என்றார் அன்புமணி ராமதாஸ். இந்த தீர்ப்பை விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.