வெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்
தருமபுரி: வெற்றி கொண்டானைப் போல தெருப்பேச்சாளராக, பாரம்பரிய மிக்க திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவதாக பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா- முத்து விழா பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
சர்வதேச அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரம் ஸ்லோ டவுன் என்பது அல்ல. மெல்ட் டவுன். அதனால்தான் முதலீடுகள் அதிகம் தேவை என்கிறோம்.
இந்த பொருளாதார வீழ்ச்சியால் வேலைவாய்ப்புகள் போகத்தான் செய்யும். விவசாயம் பாதிக்கும். இன்னும் ஏராளமான பாதிப்புகள் வரும். சர்வதேச முதலீடுகளைப் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று திரும்பினார்.
அப்போது மீம்ஸ் ஒன்று பார்த்தேன். அதில், எடப்பாடி பழனிசாமி கோட் சூட்டுடன் ஒரு பக்கம் இருக்கிறார்; இன்னொரு பக்கம் ஸ்டாலின் சட்டயை கிழித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். எடப்பாடி பழனிசாமி படத்துக்கு கீழே ரேமண்ட் விளம்பரம் என்றும் ஸ்டாலின் படத்துக்கு கீழே ஏதோ ஒரு பனியன் நிறுவன பெயரும் இருந்தது.
லோக்சபா தேர்தலின் போது ஸ்டாலின், உதயநிதி என அனைவரும் இங்கு வந்து பேசினார்கள். பொதுவாக அரசியல் கட்சிகள் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும் விமர்சிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும்.
ஒரு 3-ம் தர, 4-ம் தர பேச்சாளர்களைப் போல பேசக் கூடாது. திமுகவில் வெற்றி கொண்டான் என்ற பேச்சாளர் இருந்தார். அவர் பேசினால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும். அதைவிட மோசமாக ஸ்டாலின் பேசுகிறார்.
அதுவும் ராமதாஸின் முதுமை குறித்து பேசுகிறார். ஒரு தெருப்பேச்சாளரைப் போல பேசுகிறார். திமுக எப்படிப்பட்ட கட்சி... அண்ணாவால் தொடங்கப்பட்டு கருணாநிதியால் வளர்க்கப்பட்ட கட்சி.
வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் டாக்டர் ராமதஸ் என்றார். அப்படிப்பட்ட ஒரு தலைவரின் முதுமையை முன்வைத்து விமர்சிக்கிறார் ஸ்டாலின். அவரது மகன் உதயநிதியோ அவரை விட அதிகம். எனக்கும் பேசத் தெரியும்.
நான் நாகரிகமாகவே பேச விரும்புகிறேன். நீங்கள் அப்படிப் பேசினால் எனக்கும் அப்படியும் பேசத் தெரியும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.