'கொடூரம்..' காதல் திருமணம் செய்த இளைஞரை... கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி சித்ரவதை
தருமபுரி: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உறவினர்கள் மூன்று பேரைக் கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்துத் துன்புறுத்திய சம்பவத்தில் மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 19). டிப்ளமோ படித்துள்ளார்.
ரமேஷ் அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த 21 வயது பி.காம் பட்டதாரி இளம் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
நீட் தேர்வால் மாணவர் தற்கொலை- வருத்தம் தெரிவித்த கையோடு காதல் தோல்வி மரணங்களுடன் ஒப்பிட்ட ஹெச்.ராஜா!
காதல் திருமணம்
ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, கடந்த 10-ம் தேதி காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்து கொள்ள ஊரை விட்டு ஓடி விட்டனர். இது அப்பெண்ணின் பெற்றோருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
கடத்தல்
கடந்த 12ஆம் தேதி இளம்பெண்ணின் உறவினர்கள் சிலர், ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரையும் காரில் கடத்தி சென்று, ''உங்களுக்கு உயர் சாதி பொண்ணு கேட்குதா'' என அவர்களை அடித்து உதைத்தும், மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும் துன்புறுத்தி உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ரமேஷ், மோகனா இருக்கும் இடத்தை சொல்லச் சொல்லிச் செருப்பால் அடித்து உச்சக்கட்ட கொடுமைப்படுத்தி உள்ளனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
சிகிச்சை
மேலும் சிறுநீர் குடிக்கச் சொல்லி 2 பேரையும் அந்த கும்பல் அடித்து உதைத்ததால் அவர்கள் இருவரும் கூச்சல் போட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். காயமடைந்த 2 பேரையும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பாலக்கோடு டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனால், காவல்துறையினர் ரமேஷின் உறவினர்கள் 3 பேர் மீதும், மோகனாவின் உறவினர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சிறுநீர் குடிக்கச் சொல்லித் துன்புறுத்தியதாக மோகனாவின் உறவினர்கள் வீரமணி, ஆனந்தன், முரளி உள்ளிட்ட மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.