முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்... அன்புமணி கடும் விமர்சனம்
தருமபுரி: முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட நத்தமேடு (4), ஜாலிபுதூர் (2), டி.அய்யம்பட்டி (2) என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, என தருமபுரி, கிருஷ்ணகிரி சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை சேரந்த 566 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வாக்குச்சாடிகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு, தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. இந்தநிலையில், மறுவாக்குப்பதிவு மையங்களை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், மறு வாக்குப்பதிவிற்கு திமுகவின் தோல்வி பயமே காரணம் என்றார். தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.