அந்த லாரி ஓட்டுநரால் ஏற்பட்ட குழப்பம்.. தருமபுரிக்கு கொரோனா வந்துவிட்டதா?.. நேற்று என்ன நடந்தது?
தருமபுரியில் கொரோனா வந்துவிட்டதாக நேற்று வெளியான செய்தி காரணமாக அப்பகுதி மக்கள் இடையே நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது .
தருமபுரி: தர்மபுரியில் கொரோனா வந்துவிட்டதாக நேற்று வெளியான செய்தி காரணமாக அப்பகுதி மக்கள் இடையே நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதில் 662 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
949 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 18 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
பாதிப்பு இல்லாத மாவட்டம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தருமபுரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இருந்தது. ஆனால் நேற்று முதல் நாள் புதுக்கோட்டையில் திடீர் என்று ஒருவருக்கு கொரோனா வந்தது. இன்னும் மயிலாடுதுறை, கிருஷ்ணகிரியில் யாருக்கும் கொரோனா வரவில்லை. ஆனால் தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதாக வெளியான செய்தியால் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏன் குழப்பம்
அதன்படி இரண்டு நாட்களுக்கு முன் தருமபுரிக்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு செய்யப்பட கொரோனா சோதனையில் கொரோனா இருப்பதாக பாசிட்டிவ் வந்துள்ளது. ஆனால் இந்த முடிவில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
வெளியான செய்தி
இதனால் தருமபுரியில் கொரோனா பரவி விட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. கொரோனாவே இல்லாமல் இருந்த தருமபுரியில் கொரோனா வந்துவிட்டது என்று செய்திகள் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் அங்கு கடுமையாக அச்சம் அடைய தொடங்கினார்கள். தருமபுரி முழுக்க காட்டுத்தீ போல இந்த செய்தி பரவ தொடங்கி உள்ளது.
ஆனால் உண்மை
ஆனால் நேற்று தமிழக அரசு வெளியிட்ட கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் தர்மபுரி இடம்பெறவில்லை. தர்மபுரியில் யாருக்கும் கொரோனா இல்லை என்று தமிழக அரசு பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலவரப்படி தர்மபுரியில் யாருமே பாதிக்கப்படவில்லை. இதனால் தர்மபுரி மக்கள் யாரும் கவலைப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த லாரி ஓட்டுநர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று தெரியும்
இந்த நிலையில் அந்த லாரி ஓட்டுனருக்கு இன்று மீண்டும் கொரோனா சோதனை செய்யப்படும். இன்று செய்யப்படும் சோதனையின் முடிவில்தான் அவருக்கு உண்மையில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். அதன்பின்தான் தருமபுரியில் கொரோனா வந்துவிட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.