முடியவில்லை என்றால் எழுதிக்கொடுங்க...! ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி
தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையத்தில் பொது கழிவறைகளை ஆய்வு செய்த மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், அதன் ஒப்பந்தக்காரரை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸை தோற்கடித்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில்குமார். அன்புமணியிடம் தோல்வியை தழுவுவார் என அவரது சொந்தக்கட்சியினரே (திமுகவினர்) நினைத்த நிலையில், வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.
மருத்துவராக இருந்தவர், இவர் எப்படி இறங்கி வந்து வேலை செய்யப்போகிறார், ஆளு வேற குறுந்தாடி எல்லாம் வச்சு, பார்க்க மந்தமாக தான் இருக்கிறார் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கேலியும், கிண்டலும் செய்த நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும் அலற விடுகிறார்.
51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை!
நேற்று தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த செந்தில்குமார் எம்.பி., திடீரென்று அங்கிருந்த பொது கழிவறைகளுக்குள் நுழைந்து பார்வையிட்டார். சுத்தமின்றி, பொதுமக்களுக்கு நோய் பரவும் வகையில் கழிவறைகள் இருந்ததால் கோபமடைந்த செந்தில்குமார், இது தொடர்பாக கழிவறை ஒப்பந்தக்காரரை அழைத்து விளக்கம் கேட்டார்.
அதற்கு அவர், கட்டுப்படியாகவில்லை எனக் கூற, முடியவில்லை என்றால் எழுத்திக் கொடுத்துட்டு போங்க..நான் பயோ டாய்லட் அமைத்துக்கொடுக்கிறேன் என தெறிக்கவிட்டார். எம்.பி.யிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அந்த ஒப்பந்தக்காரர் வியர்த்து விறுவிறுத்து போனார்.
திமுக எம்.பி.செந்தில்குமாரின் இந்த நடவடிக்கையை பார்த்து வியந்துபோன பயணிகளும், பொதுமக்களும் அவரை பாராட்டினர்.