ராமதாஸ் வயதுக்கு கூட ஸ்டாலின் மரியாதை தரவில்லை.. அன்புமணி ஆதரவு பிரச்சாரத்தில் சீறிய முதல்வர்
தருமபுரி: பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தர்மபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி பகுதியில் இன்று பிரச்சார வேன் மூலமாக, அன்புமணி ராமதாஸ் உடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து, அன்புமணி ராமதாசை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், பாப்பிரெட்டி மற்றும் அரூர் சட்டசபை இடைத்தேர்தல்களில், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்!
வலிமையான பிரதமர்
மேலும் முதல்வர் பேசியதாவது: இந்தியாவிற்கு வலிமை மிக்க, திறமைமிக்க, வீரமிக்க பிரதமர் வரவேண்டும். அப்படிப்பட்ட ஒரு பிரதமர் வரவேண்டும் என்றால் உங்கள் பொன்னான வாக்குகளை மாம்பழம் சின்னத்தில் பதிக்க வேண்டும். ஒரு வலிமையான தலைமையின் கீழ் இந்திய நாடு இருக்க வேண்டும் என்பதற்காக, அன்புமணி ராமதாஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
திமுக கொண்டுவராத திட்டங்கள்
கடந்த காலங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தது. சுமார் 15 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதிலும், தமிழகத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்திற்கு புதிய திட்டங்களை கொண்டு வந்தார்களா? புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்களா? எதையுமே செய்யவில்லை. அவர்கள் அனுபவித்தது எல்லாம் பதவி சுகம். நீங்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு அவர்கள் குடும்பத்தை தான் வளப்படுத்திக் கொண்டனர். திமுகவுக்கு ஏற்கனவே நீங்கள் மிகப்பெரிய வாய்ப்புகளை கொடுத்துவிட்டீர்கள். யாருக்குமே கிடைக்காத வாய்ப்புகள் அவர்களுக்கு நீங்கள் கொடுத்தும் கூட நாட்டு மக்களை அவர்கள் கவனிக்காமல், தங்கள் வீட்டு மக்களைத்தான் கவனித்தார்கள்.
துரோகம் செய்துவிட்டார்கள்
இப்போது நடைபெறுகிற தேர்தல் மூலமாக, மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்து, அதன் மூலமாக ஒரு வலிமையான தலைமை மத்தியில் ஏற்படும். தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதிகள் நமக்கு கிடைக்கும். இதன் மூலமாக தமிழகம் வளர்ச்சி அடையும். சில துரோகிகள் பேச்சை கேட்டு, 18 சட்டசபை உறுப்பினர்கள் விலகிச் சென்றதால் இந்த இடைத்தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். அந்த துரோகிகள் இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். லோக்சபா தொகுதி மற்றும் சட்டசபை தொகுதியில் தலா ஒருவர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் மூலம் அந்த நயவஞ்சகர்களுக்கு தக்க பாடத்தை நீங்கள் கற்பிக்க வேண்டும். இந்த தேர்தலின் மூலம் அரசியலில் இருந்து அவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
சிப்காட் தொழிற்சாலை
நல்லம்பள்ளி பகுதியில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்சாலை வர உள்ளது. 1783 ஏக்கரில் அந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த பகுதி, வருங்காலத்தில் ஒரு தொழில் பேட்டையாக அமையும். இந்த பகுதி மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கு நாம் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும். அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர். இந்த முறையும் அவர் மத்திய அமைச்சராக வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அப்படி அவர் அமைச்சராக வரும் போது, தர்மபுரி மாவட்டம் பெரும் முன்னேற்றம் அடையும்.
ராமதாஸ் பற்றி ஸ்டாலின் பேச்சு
பாமக நிறுவனர் ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு மணி அடிக்கிறார் என்று ஸ்டாலின் இன்று சேலம் கூட்டத்தில், பேசியுள்ளார். இது எவ்வளவு மோசமான வார்த்தை. ராமதாஸின் வயது என்ன? அனுபவம் என்ன? உங்களுக்கு எவ்வளவு அகங்காரமும், திமிரும் இருந்தால் இப்படி பேசுகிறீர்கள்? இந்த திமிர் அத்தனையையும், இந்த தேர்தல் மூலமாக உடைத்தெறியப்பட வேண்டும்.
மரியாதை இல்லை
இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய தொகுதியாக தர்மபுரியை மாற்ற வேண்டும். ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் மரியாதை தரப்பட வேண்டும். அவரது வயதுக்கு மரியாதை தரவேண்டும். ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் வளர்ப்பு அப்படி. தேர்தல் முடிந்ததும் ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தொடரும். பிரதமர் வழங்கும் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டமும் உங்களுக்கு பலன் தரும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் உரையாற்றினார்.