குழந்தைகளுக்கு ஆழ்துளை கிணறு.. விலங்குகளுக்கு திறந்தவெளி கிணறு.. அலட்சியம் ஏன்?.. மூடிவிடுங்க!
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 50 அடி ஆழ திறந்தவெளி கிணற்றில் விழுந்து சிக்கிய யானையை வனத்துறையினர் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனர். இது போல் யானைகள் நடமாடும் பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் குறைந்த நிலையில் கிணறு ஒன்று உள்ளது.
இந்த கிணறு வழியாக உணவு தேடி வந்த 8 வயது பெண் யானை கிணற்றில் வியாழக்கிழமை அதிகாலை விழுந்தது. யானையின் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மயக்க ஊசி
அந்த கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. கயிறுகளை கட்டி யானையை கிரேன் மூலம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. எனினும் அது முடியவில்லை. இதையடுத்து யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
யானை
பின்னர் ஒரு கயிற்றை யானையில் கட்டி அதன் ஒரு முனையை கிரேனில் கட்டினர். அதன் பின்னர் கிரேனை இயக்கி யானையை கிணற்றிலிருந்து மீட்டனர். அந்த யானையின் உடல்நலம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் வெளியிட்டுள்ளார்.
This is how yesterday female elephant from Dharmapuri, TN was rescued. Which fell in open well. After hours of operation, which included supplying food also, the elephant is rescued by forest team. It was a 50 feet deep well. And credits to the elephant also for her will. @ANI pic.twitter.com/aBAabHcM1I
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 20, 2020
கிணறு
அவர் கூறுகையில் யானையை மீட்க கிட்டதட்ட 14 மணி நேரம் மீட்பு குழுவினர் போராடியுள்ளனர். யானை சோர்ந்து விடாமல் இருக்க அதற்கு உணவும் வழங்கப்பட்டது. அதன் தைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எப்போதுமே திறந்த வெளி கிணறுகள், கால்வாய்கள் யானைகள் செல்லும் வழிப்பாதையில் இருப்பது அதற்கு ஆபத்தில் போய் முடிகிறது.
பாதுகாப்பு சுவர்
அவை பெரிய உருவம் கொண்டவை என்பதால் உணவு தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது இதுபோன்ற இடர்களை சந்திக்கின்றனர். குறைந்தபட்சம் இதுபோன்ற திறந்த வெளி கிணறுகளை நாம் மூடுவோம் அல்லது பாதுகாப்புக்காக சுற்றுச் சுவர் அமைப்போம். 50 அடி ஆழ கிணறு சற்று கற்பனை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.