தருமபுரி அருகே ஆடு, மாடுகள் விற்பனை ஜோரு... வியாபாரிகள் ஹேப்பி
தருமபுரி: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோடு வாரச்சந்தையில் சுமார் 2 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு நடந்த வாரசந்தையில் 3 ஆயிரம் மாடுகள், 1,500 ஆடுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்கள் வந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். மாடுகள் 15,000 ரூபாய் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையானது.
சந்தையில் வழக்கமாக , நல்ல கொழுத்த ஆடுகள், 6,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து கரிநாளில் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கத்தை விட நேற்று சந்தைக்கு ஆடுகளும், மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர்.
பொங்கலை முன்னிட்டு ஆடுகள், 10,000 ரூபாய் வரை விற்பனையானதால், அதற்கேற்ப இறைச்சி விலையும் அதிகரிக்கும். இதனால் அசைவ ப்ரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.