28 ஆண்டுக்கு பின் முதல்முறை.. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை மூழ்கடித்து ஆர்பாரித்து செல்லும் காவிரி
Recommended Video
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.40 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒகேனக்கலில் தொங்கும் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாயந்தோடும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கர்நாடக மற்றும கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக . கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை தற்போது நிரம்பி வழிகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய கரைகள்
இதனால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி சுமார் 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒகேனக்கலில் சுமார் 2.40 லட்சம் கன அடி நீர் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
அஞ்செட்டி செல்லும் சாலையில்
மேலும் ஒகேனக்கலில் தொங்கும் பாலத்தின் மீது ஏறும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அஞ்செட்டி செல்லும் சாலையில் ஒகேனக்கல் அடுத்த நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தால் சாலை மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வரவேண்டாம்
வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல் இயக்கவும், அருவி, ஆறு உள்ளிட்ட இடங்களில் குளிக்கவும் ஒகேனக்கல்லில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் அளவு குறைந்து இயல்பாகும் வரை சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று மாலை வருகிறது வெள்ளம்
இதனிடையே இன்று காலை முதல் கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நேற்று விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை இன்னும் அடையவில்லை. இன்று மாலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் குளிக்கவும் சுற்றிப்பார்க்கவும் முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இந்நிலையில் ஒகேனக்கலில் தொங்கு பாலத்தை மூழ்கடித்து செல்லும் அளவுக்கு வெள்ளம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் முதல்முறையாக தொங்கு பாலத்தை மூழ்கடித்தபடி காவிரியில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.