கர்நாடகாவில் கனமழை எதிரொலி.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு
Recommended Video
தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 9,500 லிருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் 9வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்த நிலையில், 9,500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, 10, 000 கனஅடியை எட்டியுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல்களுக்கு விதிக்கப்பட்ட தடை 9 வது நாளாக நீடிக்கிறது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று, விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 9 ஆயிரத்து 200 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் - 47.67 அடியாக உள்ளது. நீர் இருப்பு - 16.37 டிஎம்சி, நீர்வரத்து - 9, 200 கனஅடி, நீர் திறப்பு - 1000 கனஅடியாகவும் இருந்து வருகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு காவிரியில் நீர் திறப்பை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களில், அணையின் நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்துள்ளது.