டெண்டர்களில் மூக்கை நுழைத்தார்! 10 ஆண்டுகள் தொல்லை தந்தார்! அதிமுக Ex அமைச்சர் மீது பரபரப்பு புகார்!
தருமபுரி: கடந்த 10 ஆண்டுகளாக சாலை ஒப்பந்தப் பணிகளில் மூக்கை நுழைத்து டெண்டர் கிடைக்கவிடாமல் செய்ததாக அதிமுக மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஒப்பந்ததாரர் ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
Recommended Video
அண்மையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆளாகி சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
இந்நிலையில் பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் அவரை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் உண்டு.. எப்போது தெரியுமா.. அமைச்சர் அதிரடி
சாலை ஒப்பந்ததாரர்
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராகவும், தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில பொது செயலாளராகவும் உள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இவர், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, ''தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் உயர் கல்விதுறை அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் எனக்கு கிடைக்கும் பல்வேறு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு கிடைக்கவிடாமல் செய்தார்.''
டெண்டர் ரத்து
''ஒருவேளை அப்படியே டெண்டர் கிடைத்தாலும் அவற்றை ரத்து செய்து, கடந்த 10 வருடங்களாக இடையூறு செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை மிரட்டி எனது குடும்ப உறுப்பினர்களை ஒப்பந்தம் எடுக்கவிடாமல் முன்னாள் அமைச்சர் தடுத்து வந்தார். பெரும்பான்மையான ஒப்பந்தங்களை தன் குடும்ப உறுப்பினர்களுக்கும், தன் பினாமிகளுக்கும் மட்டுமே ஒப்பந்தம் வழங்கிவந்தார்.''
பேக்கேஜ் ஒப்பந்தம்
'' இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தருமபுரி நெடுஞ்சாலை கிராம சாலை கோட்டத்தில் அவரது பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பேக்கேஜ் ஒப்பந்தம் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் நான் முறையாக பங்கேற்றும், அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யவிடாமல் முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவரது மருமகன் ரவிசங்கர் மூலம் நீதிமன்றம் சென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தார்.''
அரவை மில்
''கடந்த திமுக ஆட்சியில் அன்றைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தருமபுரி மாவட்டத்தில் 30 அரவை மில் இருந்ததை 105 அரவை மில்லாக உயர்த்தினார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட அரவை மில் மூடக் காரணமாக இருந்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் '' என பரபரப்பு குற்றசாட்டுகளை செய்தியாளர்களிடம் ஒப்பந்ததாரர் பாஸ்கர் தெரிவித்தார்.