தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கையில் தகவல்!
தருமபுரி: தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனமுடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிங்காரவேலன் கமிஷன் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் பட்டியலின இளைஞர் இளவரசன். அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீவைத்தல் போன்ற சம்பவங்களும் நடந்தன.
இளவரசன்
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக திவ்யா கூறியதை அடுத்து அவர் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கமிஷன்
அவரை யாரோ கொலை செய்து தண்டவாளத்தில் வீசிவிட்டதாக கருத்துகள் எழுந்தன. இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
இந்த ஆணையம் இளவரசன் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரை விசாரணை செய்தது. இந்த நிலையில் 5 ஆண்டுகள் முடிவுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்காரவேலன் ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது.
அறிக்கை கூறுவது என்ன
ஆனால் அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையின் தகவல்களை வைத்து இளவரன், திவ்யா பிரிந்து சென்ற மனவருத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையிலும் இளவரசனின் இரு பிரேத பரிசோதனைகளின் அடிப்படையிலும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.