சொந்த கோட்டையில் சரிந்த அஸ்திவாரம்.. அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்த தர்மபுரி.. திமுக எப்படி வென்றது?
பாமகவின் வலுவான கோட்டையான தர்மபுரி தொகுதியில் தற்போது அன்புமணி தோல்வி அடையும் நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: பாமகவின் வலுவான கோட்டையான தர்மபுரி தொகுதியில் தற்போது அன்புமணி தோல்வி அடையும் நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் பரபரப்பு எல்லாம் ஒரு வழியாக முடிந்துவிட்டது. பாஜக நினைத்தபடியே 280+ இடங்களில் முன்னிலை பெற்று மெஜாரிட்டி பெற்றுள்ளது.
ஆனால் தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் மற்ற மாநிலங்களின் அரசியல் நிலவரம் போல இல்லை. தமிழகம் பல அரசியல் தலைவர்களுக்கு நிறைய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது.
அன்புமணி மோசம்
இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட நபர்களில் ஒருவர் பாமக வேட்பாளர் அன்புமணி. ஆனால் அவர் தனது சொந்த கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளார். தர்மபுரி தொகுதியில் மிக மோசமான தோல்வியை நோக்கி அவர் சென்று கொண்டு இருக்கிறார். 35000 வாக்குகள் அவர் பின்தங்கி உள்ளார்.
எப்படி திமுக
திமுக இவரை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. யாரிடம் திமுக தோல்வி அடைந்தாலும் அடையலாம், கண்டிப்பாக அன்புமணியிடம் தோல்வி அடைய கூடாது என்று திட்டமிட்டு, திமுக செயல்பட்டு வந்தது. அதன் பயனை தற்போது திமுக வேட்பாளர் செந்தில்குமார் அறுவடை செய்து வருகிறார். இந்த வெற்றி ஒன்றும் திமுகவிற்கு சாதாரணமாக கிடைக்கவில்லை.
என்ன நடந்தது
இந்த தேர்தலில் திமுக மிக முக்கியமான விஷயங்களை கடைபிடித்துதான் பாமக அன்புமணிக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கியது. அதன்படி,
பாமகவின் ஜாதி அரசியலை கையாள அதே ஜாதியை சேர்ந்த தகுதியான நபரை தேர்தலில் நிற்க வைத்தது.
பாமகவின் வாக்குகளை கவர அதிருப்தியில் இருக்கும் வன்னியர் வாக்குகளை திசை திருப்பியது.
தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனை வைத்து பாமகவின் வாக்குகளை பெரிய அளவில் பிரித்தது என்று மூன்று முக்கிய விஷயங்களை திமுக கையாண்டு இருக்கிறது.
மிக முக்கியம்
தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவாக இருந்ததும், காடுவெட்டி குரு மறைவால் அன்புமணி மீது வன்னியர்கள் பலர் அதிர்ச்சியில் இருந்ததும், இந்த வெற்றி திமுக வசம் செல்ல முக்கிய காரணம் . தர்மபுரியை மையமாக வைத்துதான் பாமக கோட்டை கட்ட திட்டமிட்டது.. ஆனால் தற்போதே அங்கேயே அஸ்திவாரம் சரிந்துள்ளது!