லாரியில் மோதி.. சென்டர் மீடியனை இடித்து.. ஆம்னி பஸ்ஸை கவிழ்த்த லாரி.. 2 பேர் பலி
தருமபுரி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள்
தர்மபுரி: லாரி ஒன்று தாறுமாறாக ரோட்டில் ஓடி, முன்னால் சென்ற இன்னொரு லாரி மீது மோதியதுடன், எதிரே வந்த ஆம்னி பஸ்ஸின் மீதும் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு அரிசி லோடு ஏற்றிய லாரி ஒன்று இன்று காலை தொப்பூர் கணவாயில் சென்று கொண்டிருந்தது.
அது தாழ்வான ரோடு என்பதால் லாரி படுவேகமாக சென்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது, முன்னாடி சென்று கொண்டிருந்த இன்னொரு லாரி மீது பின்புறமாக பலமாக மோதியது. அத்துடன் நிற்காமல், மோதிய வேகத்திலேயே சென்டர் மீடியனை தாண்டி எதிர்புற ரோட்டுக்கு தாறுமாறாக ஓடியது.
அப்போது, எதிரே கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்புறத்தில் அதுவும் குறுக்கே ஒரு லாரி தறிகெட்டு வருவதை பார்த்த அந்த பஸ்டிரைவர், இடதுபுறமாக வண்டியை ஓரங்கட்டினார். அதனால் லாரியானது நேருக்கு நேர் மோதாமல், பஸ்ஸின் பக்கவாட்டில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுனர் ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆம்னி பஸ்ஸில் இருந்த பயணிகள் 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவருமே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஒரு பெண் பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 11 பேருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
பட்டப்பகலில் நடந்த விபத்தால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.