பெங்களூர் டூ சேலம்.. மரண சாலை தொப்பூர் கணவாய்.. விபத்தை தடுக்க சாலை விரிவாக்கம்
தர்மபுரி: அடிக்கடி விபத்து நடந்து வரும் தொப்பூர் கணவாயில், இனி விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது தர்மபுரியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் போது வரும் அடர்ந்த மலைப்பகுதி தான் தொப்பூர் கணவாய். சுமார் 3 கி செல்லும் இந்த அடர்ந்த காடுகள் அடங்கிய வனப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
அதிபயங்கர விபத்துக்கள் நடந்து வரும் தொப்பூர் கணவாய் 2007ம் ஆண்டு வரை இருவழிச் சாலையாகவே இருந்து வந்தது. அந்த ஆண்டில் தான் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இருவழிச் சாலையாக இருந்த போது அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின்னரும், விபத்துகள் குறையவில்லை.
மர்மமான தொப்பூர் கணவாய் மரண சாலை.. பேய் அச்சத்தில் 'பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ பகீர் பின்னணி!
அடிக்கடி விபத்து
சேலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலை மேடாக இருப்பதால் அந்த சாலையில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அதில் வரும் வாகனங்கள் வழக்கம் போல் வந்துவிடுகின்றன . ஆனால் தர்மபுரியில் சேலம் செல்லும் வாகனங்கள் தான் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள், வாகனங்கள் சேதம், படுகாயம் என மரணசாலையாக மாறி உள்ளது.
3 கிலோமீட்டர் தூரம்
சரியாக எந்த இடத்தில் இப்படி ஏற்படுகிறது என்று சொல்வதென்றால் தர்மபுரியில் இருந்து 24வது கிலோமீட்டரில் குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கிருந்து பூரிக்கல் ஜங்சன், ஆஞ்சநேயர் கோயில், வனத்துறை பூங்கா, தடுப்பணை பகுதியை தாண்டி தொப்பூர் வழியாக அனைத்து வாகனங்களும் சேலம் செல்லும். இந்த பகுதி 3 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அடுத்தடுத்து 3 அபாயகரமான வளைவுகள் பள்ளமாக இருக்கும். கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்வது மிக சிரமமான காரியம் ஆகும். இந்த 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவான வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். அதை தாண்டி வேகமாக சென்றால், அதாவது இரண்டாவது கியரிலேயே செல்ல வேண்டும். அதை மீறி வேகமாக சென்றால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன.
பல நடவடிக்கைகள்
இந்த சாலையில் தினமும் 25 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக லாரி, பேருந்து என சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன. இந்த சாலையில் கடந்த இரு நாளுக்கு முன்பு கூட விபத்து நடந்து பலர் படுகாயம் அடைந்தனர். எனினும் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையும் பல்வேறு பணிகளை செய்திருக்கிறது.
சரிவாய் ரோடு
ஆனாலும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வந்து கட்டுப்பாட்டை இழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இன்னொரு காரணம் ரோடு வளைவில் எதிர் திசை சரிவாய் உள்ளது அதுவும் வாகன ஒட்டிகள் கட்டுப்பாடு இழக்க காரணம். ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தால், அந்த வாகனத்தை அப்புறப்படுத்துவதற்குள் பின்னால் வரும் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
சாலை விரிவாக்கம்
எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னொரு முயற்சியாக அடிக்கடி விபத்து நடக்கும் மிக அபாயகரமான பகுதியான ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள அடுத்தடுத்த வளைவுகளை நேராக்கி அகலப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ₹2 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது.. கடந்த சில நாட்களாக பாளையம் சுங்கச்சாவடி மூலம், கணவாயில் சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களில் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பு தொப்பூர் கணவாய் சாலை வழியாக தர்மபுரியில் இருந்து சேலம் வருபவர்கள் குறிப்பிட்ட 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 2வது கியரிலயே செல்வது நல்லது.