அமைச்சரவையில் இல்லாத ஒருவர் அமைச்சராக நாடகமாடுகிறார்... கே.பி.முனுசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்..!
தருமபுரி: அமைச்சரவையில் இல்லாத ஒருவர் அமைச்சராக நாடகம் நடத்தி வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
மேலும், திமுக ஆட்சியில் இருந்த மளிகைப் பொருட்களின் விலைவாசியையும் இப்போது உயர்ந்துள்ள விலைவாசியையும் பட்டியலிட்டார்.
தருமபுரியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
வளர்ச்சி இல்லை
''இங்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அ.தி.மு.க.வைச் சார்ந்தவர். அமைச்சராகவும் இருக்கிறார். அவருடைய வளர்ச்சிதான் அதிகமாக இருக்கிறதே தவிர, இந்த மாவட்டத்திற்கும் இந்தப் பகுதிக்கும் எந்த வளர்ச்சியும் இல்லை என்பதைப் பற்றியும் அவர் வேதனையோடு இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ஒகேனக்கல் திட்டம் கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது முழுமையாக இந்த மாவட்டத்திற்கு வந்து சேரவில்லை.''
கே.பி.முனுசாமி
''அமைச்சர் இல்லாமலேயே ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது கே.பி. முனுசாமி. இப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவர் அமைச்சர் இல்லை. ஆனால் அவர் அமைச்சர் போல ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.''
கூட்டு குடிநீர்
''ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை போல பெரிய அளவில் நிச்சயமாக மக்களுக்கு பயன்பட்டு இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் சில சச்சரவுகளை, சில தடங்கல்களை கே.பி.முனுசாமி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார் என்று இந்த பகுதி மக்கள் தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கே.பி.முனுசாமியின் எஸ்டேட் பாதிக்கப்படும் என்று அதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஊரே இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை.''
கிடுகிடு உயர்வு
''தி.மு.க. ஆட்சி இருந்த போது சிலிண்டர் 150 ரூபாயாக இருந்தது. இப்பொழுது 750 ரூபாயாக உள்ளது. துவரம்பருப்பு ஒரு கிலோ 38 ரூபாயாக இருந்தது. இப்பொழுது 92 ரூபாயாக உள்ளது.உளுத்தம்பருப்பு தி.மு.க. ஆட்சி இருந்தபோது ஒரு கிலோ ரூபாய் 60. இப்பொழுது ரூபாய் 120. பாமாயில் எண்ணெய் தி.மு.க. ஆட்சியில் 48 ரூபாய். இப்பொழுது 90 ரூபாய். சர்க்கரை தி.மு.க. ஆட்சியில் 18 ரூபாய்க்கு கிடைத்தது. இப்பொழுது 40 ரூபாய். ''
படிப்படியாக
''ஆகவே விலைவாசி இந்த அளவிற்கு உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் இன்றைக்கு இந்த கிராம சபை கூட்டத்தை கூட்டி இதையெல்லாம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரைக்கும் அவர் ஏதோ படிப்படியாக வளர்ந்து முதலமைச்சர் ஆனேன் என்று ஒரு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் எப்படி ஆனால் என்பது உங்களுக்கு தெரியும்.''
திமுக விசாரிக்கும்
''நான் இப்போது சொல்கிறேன், இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. தமிழ்நாட்டில் உங்கள் அன்போடு ஆதரவோடு ஆட்சிக்கு வரப்போகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பதையும் இந்த ஸ்டாலின் தான் செய்யப் போகிறோம். அரசியல் வேறு, எதிரி வேறு, துரோகம் வேறு, அது வேறு. ஒரு முதலமைச்சருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை. ஆகவே தான் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதைத்தான் செய்யப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.''