தருமபுரி அரசு மருத்துவமனையில் தவறான சிகிக்ச்சை.. தாயும் சேயும் பலி.. உறவினர்கள் மறியல்
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாயும் சேயும் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த செக்கொடி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று முன் தினம் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை 10 மணிக்கு ஜோதிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அக்குழந்தை பலியாகிவிட்டது. மேலும் ஜோதிக்கும் அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினு்ம அவர் இரவு 11 மணிக்கு உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் ஜோதியும் சிசுவும் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்ய
இதையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் அங்கு வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து ஜோதியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.