நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து மாணவர் இர்பான் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்ததை அடுத்து உதித் சூர்யாவும் , அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகினர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், கைதான வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஜார்ஜ்தான் ஆள்மாறாட்டம் செய்வதற்கான உதவிகளை செய்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் ஜார்ஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறிய தகவலின் பேரில் மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பயிர் காப்பீடு தருவதில் அதிகாரிகள் குளறுபடி... விளக்கம் கேட்ட டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ
அதுபோல் அபிராமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்ததாக தெரியவந்தது.
இந்த நிலையில் இர்பானின் தந்தை முகமது சஃபியை கைது செய்தவுடன் தலைமறைவாக இருந்த இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இர்பான் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி தருமபுரி அரசு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.