மேல கை வைக்கிறார்.. மிரட்டுகிறார்.. மாணவிகள் கண்ணீர்.. பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
தருமபுரி: "மேல கை வைத்து பேசுகிறார்.. வெளியே சொன்னால் டிசி தந்துடுவேன்னு மிரட்டுகிறார்" என்று பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் முறையிட.. பெற்றோர்களோ பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ளது பூச்சூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில், தலைமையாசிரியர் சுப்பிரமணி மீதுதான் இப்போது புகார் எழுந்துள்ளது. இவருக்கு வயது 53 ஆகிறது.
பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும், கை வைக்க வேண்டாம் என்று சொன்னாலும் சுப்பிரமணி கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. ஸ்கூலில் நடப்பதை பற்றி வீட்டில் சொன்னால், டிசி கொடுத்து அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறாராம் சுப்பிரமணி.
சுப்பிரமணி
இதனால் மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் சுப்பிரமணியை எச்சரித்தும் சென்றுள்ளனர். இருந்தாலும் மீண்டும் அதேபோல மாணவிகளிடம் சுப்பிரமணி நடந்து கொண்டுள்ளார்.
போலீசார்
இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுள்ள விவகாரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சுப்பிரமணியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.
கைது
இதையடுத்து, பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், ஏரியூர் ஸ்டேஷனுக்கு சுப்பிரமணியனை கைது செய்து அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். பின்னரை, சம்பந்தப்பட்ட மாணவிகளும், அவர்களது பெற்றோரும் பென்னாகரம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
நீதிமன்ற காவல்
அதன்படி, சுப்பிரமணி போக்சோவில் கைது செய்யப்பட்டு, பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், கைதான தலைமை ஆசிரியை சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) கணேசமூர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.