ஊனமுடன் வளர்ந்த சிசு - வேதனையில் கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை.. வளைகாப்புக்கு முதல் நாள்!
பென்னாகரம்: கருவில் குழந்தை ஊனம் என தெரிந்ததால் கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்தேறியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஸ்கேன் பரிசோதனை
சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
வளைகாப்பு
அப்போது அவரது கருவில் இருந்த குழந்தை ஊனமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற இருந்தது.
இறப்பு
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதாவை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கீதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சங்கீதாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் இதுதொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இன்று வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.