தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்... தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாணையில் தருமபுரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கவில்லை. அதனால், அது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மீறி நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் சேவல் சண்டை, ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது தர்மபுரிக்கு மட்டும் தடை ஏன் எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.