தொப்பூர் கோர விபத்து.. என்ன காரணம்.. உண்மையில் அங்கு என்ன நடந்தது? பகீர் தகவல்
தர்மபுரி: தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 12 கார்கள் மீது சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பதையும் என்ன நடந்தது என்பதையும் இப்போது பார்ப்போம்.
பொதுவாகவே தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் மலைப்பகுதி என்பதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும். ஆனால் அப்படி செல்லாமல் அதிக வேகத்தில் செல்வதால் தான் அங்கு விபத்துக்கள் ஏற்படுகிறது. நான்கு வழிச்சாலை என்கிற போதிலும் சரியான வேகத்தில் செல்லாமல் அசுர வேகத்தில் செல்வதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகிறது.
சரி நேற்றைய விபத்துக்கு என்ன காரணம் என்பதற்கு வருவோம். வேலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிய லாரி சேலத்துக்கு நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் போலீஸ் குவாட்டர்ஸ் அருகே சென்ற போது முன்னால் மெதுவாக சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயம் அடைந்தனர்.
பயங்கர வேகத்தில் வந்த லாரி.. அடுத்தடுத்து மோதல்.. சினிமா காட்சி போல பறந்த கார்கள்- தொப்பூர் வீடியோ
ஊர்ந்து சென்ற வாகனங்கள்
இந்த விபத்தின் காரணமாக சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒருவழிப்பாதையாக வாகனங்கள் திரும்பி விடப்பட்டது. இதனால் தர்மபுரி-சேலம் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.
கார்கள் நொறுங்கின
இந்நிலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மாலை 3 மணி அளவில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே ஆந்திராவில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த கார்கள் மீது அதிகவேகத்தில் அடுத்தடுத்து மோதியது. இதில் கார்கள் தூக்கி வீசப்பட்டு ஒன்றன் மீது ஒன்று விழுந்து நொறுங்கின.
20 பேர் படுகாயம்
காரில் சென்றவர்கள் என்ன நடந்தது என்று அறியாமல் விபத்தில் சிக்கிய அபாய குரல் எழுப்பினர். இந்த கொடூர விபத்தில் 12 கார்கள், ஒரு டூவிலர், ஒரு மினி லாரி என அடுத்தடுத்து மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாலை அமைப்பு சரியில்லையா
இந்த விபத்திற்கு அந்த பகுதியில் உள்ள அமானுஷ்ய சக்திகளே காரணம் என்று சிலர் வழக்கம் போல் வதந்தி பரப்பி வருகிறார்கள். சிலர் சாலையில் அமைப்பு மோசமாக உள்ளதாகவும், சாலை அமைத்த விதம் சரியில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் இரண்டு காரணங்களுமே உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
டிரைவரின் அலட்சியம்
உண்மையில் நேற்யை தொப்பூர் கணவாய் விபத்திற்கு சிமெண்ட் லாரி ஓட்டுனர், மற்ற வாகனங்கள் மெதுவாக வந்த போது, அசுர வேகத்தில் வந்ததுடன், மெதுவாக வாகனங்கள் சென்றதை கவனிக்காமல், பிரேக் பிடிக்காமல் கண் முன் தெரிந்த அத்தனை வாகங்களையும் நசுக்கி தள்ளினார். அவர் மற்ற வாகனங்களைப் போல் மெதுவாக வந்திருந்தால் விபத்தே நடந்திருக்காது.
அதிக வேகத்தில் வாகனங்கள்
பொதுவாக தர்மபுரி சுங்கச்சவாடியை தாண்டும் போதே மலைப்பகுதி சாலை என்பதால் தொப்பூர் கணவாய் குறித்து எச்சரிப்பார்கள். 4வது கியரில் செல்ல வேண்டாம் என்றும், இரண்டாவது கியரில் எச்சரிக்கையோடு மெதுவாக செல்லுங்கள் என்றும் கூறுவார்கள். ஆனால் எச்சரிக்கைகளை மீறி தொட்ர்ந்து அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதே விபததிற்கு முக்கிய காரணம். இன்னொரு காரணம் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் அந்த பகுதியில் செல்லும் போது அதிக வேகத்தில் சென்றால் உடனே வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது மிக கடினம் ஆகும். எனவே தான அதிக விபத்த்துக்கள் ஏற்படுகிறது.
6வழிச்சாலை
இதனிடையே தொப்பூர் கணவாய் விபத்துக்களை தவிர்க்க 110 கோடியில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், தர்மபுரியில் இருந்து தொப்பூர் வழியாக நாமக்கல் வரை 6 வழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தர்மபுரி எஸ்பி பிரவேஷ்குமார் கூறினார்.