பாஜகவின் டார்கெட் விஜய்.. ரஜினி போல் விஜய்யும் கீழே விழுவாரா.. 1 வாரத்தில் தெரியும்.. கே எஸ் அழகிரி
தருமபுரி: பாஜக விஜய்க்கு இலக்கு வைத்திருக்கிறது. ரஜினி போல் விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியவரும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கே எஸ் அழகிரி பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அவர் கூறுகையில் கடைசியாக பாஜகவுக்கு கிடைத்திருக்கும் இலக்கு விஜய். அவர்களுக்கு விஜய் மீது சின்ன சந்தேகம் வந்துள்ளது, அதாவது ரஜினியின் ரசிகர்கள் எல்லாம் வயதானவர்கள்.
தைரியம்
விஜய் ரசிகர் இளைஞர்கள். எனவே விஜய்யை பிடிங்கன்னு பாஜக சொல்லியிருக்கும். ரஜினி எப்படி அறிக்கை வெளியிட்டாரோ அது போல் விஜய்க்கும் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையை விஜய் கூறுவது அவரது தைரியத்தை பொறுத்தது.
துணை
அவரும் ரஜினி மாதிரி கீழே விழுந்துவிடுவாரா இல்லை தைரியமாக பாஜகவின் அறிக்கையை வாசிக்க மாட்டேன் என்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதெல்லாம் ஒரு வாரம் கழித்துதான் தெரியும். விஜய் உறுதியாக இருப்பார் என நாங்கள் கருதுகிறோம். இதே மேடையில் இருப்பவர்கள் அனைவரும் அவருக்கு துணையாக இருப்போம் என இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறோம் என்றார் அழகிரி.
நோட்டீஸ் ரத்து
நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாகச் செலுத்தவில்லை என கூறி, 2002 மற்றம் 2005 வரையிலான மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து ரூ.66,22,436 அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்ததில் அந்த நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.
ரூ 1 கோடி
ஆனால் இதை எதிர்த்து வருமான வரித் துறை மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி பேசுகையில் சட்டத்திற்கு ஆதரவு கருத்தை பேசினார். அது போல் என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றையும் ரஜினி ஆதரித்தார். இதையடுத்து அவர் மீதான வருமான வரித் துறை ரத்து செய்யப்பட்டது. ரூ 1 கோடிக்கு குறைவாக அபராதம் இருந்தால் வழக்கு தொடருவதில்லை என்பது ஐடியின் புதிய கொள்கையாகும்.
வருமான வரித் துறை
ஆனால் வழக்குகள் ரத்தானதற்கு பாஜகவுக்கு அடிபணிந்து ரஜினி பேசியதே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன. இதே போல் விஜயையும் பாஜகவை ஆதரிக்கும்படி ஒரு அறிக்கையை பாஜக தயார் செய்து அவரை வாசிக்க வைக்கும் என காங்கிரஸ் கூறுகிறது. வருமான வரித் துறை சோதனையில் விஜய் வீட்டில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. எந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.