முனியப்பா சாமி சிலைக்கு செருப்பு மாலை.. விஷமிகள் அட்டகாசம்.. தர்மபுரியில் பெரும் அதிர்ச்சி
முனியப்ப சாமிக்கு செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தருமபுரி: சாமி சிலைக்கு பூஜை செய்ய வந்தால், சுவாமிக்கு பட்டை நாமம் பூசி, செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள் நபர்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கிராமம் கூத்தப்பாடி. இங்கு பழமைவாய்ந்த முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு இந்த முனியப்பன் சுவாமிதான் குலதெய்வம்.
மழை பெய்ய வேண்டி 2 ஆயிரம் களி உருண்டைகள் படையலிட்டு முனியப்பன் சுவாமியை பொதுமக்கள் வழிபடுவதுதான் இவர்களது வழக்கம்.
அந்த வகையில் இன்று அந்த வழிபாடு நிகழ்ச்சியை நடத்த இருந்தார்கள். அதற்காக ஏற்பாடுகளுடன் செய்ய போகும்போதுதான், சாமி சிலைக்கு யாரோ பட்டை நாமம் பூசியிருந்தனர். அதோடு, செருப்பு மாலையும் அணிவித்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இந்த காரியத்தை செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏரியூர் - பென்னாகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.