போய் தொண்டர்களை பாரு.. தைரியம் தானாய் வரும்ன்னு அப்பா சொன்னாரு.. விஜயகாந்த் மகன் நெகிழ்ச்சி
தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி: "போய் தொண்டர்களை பாரு.. தைரியம் உனக்கு தானாய் வரும்ன்னு அப்பா சொன்னாரு" என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஒருசில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் கட்சியை சரியாக கவனிக்காமல் போய்விடவும், மனைவி பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி தந்தார். மகன் விஜய பிரபாகரனுக்கும் கட்சி பொறுப்பு தந்திருக்கிறார்.
இப்போது சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார். சிகிச்சை ஒரு பக்கம் நடந்தாலும், தன் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோ என அவ்வப்போது வெளிப்படுத்தி தொண்டர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
வீட்டு விசேஷங்கள்
எனவே சில மாதங்களாகவே தேமுதிகவை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் விஜய பிரபாகரன், கட்சி சம்பந்தமான நிகழ்ச்சி என்றாலும், நிர்வாகிகள் வீட்டு விஷேசங்கள் என்றாலும் தவறாமல் கலந்துகொள்கிறார். செய்தியாளர்களிடம் அடிக்கடி பேசி தேமுதிக சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
விஜய பிரபாகரன்
இந்த நிலையில், தருமபுரியில் தேமுதிக சார்பில் 1400 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு 50 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த பரிசில் எவர்சில்வர் குடம், அரிசி, புடவை, கரும்பு உள்ளிட்டவை இருந்தன. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் சொன்னதாவது:
தைரியம் சொன்னார்
"அப்பா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரியில் பொங்கல் விழாவிற்கு போகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு "நீ போய் தொண்டர்களை பாரு. உனக்கு தைரியம் தானா வரும்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இப்போ ரொம்ப தைரியமாக இருக்கு.
வதந்திகளை நம்பாதீர்
அப்பா உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார். சீக்கிரம் வர்றேன்னு போய் சொல்லு, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வர்றேன்னு போய் சொல்லென்று சொன்னார். அவருடைய உடல்நலம் பற்றி சோஷியல் மீடியாவில் வரும் செய்திகளை பொதுமக்கள் யாருமே நம்ப வேண்டாம், உடல்நலம் தேறி திரும்பவும் அரசியலில் ஈடுபடுவார்.
தேமுதிக இன்றி முடியாது
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது, இதை நான் ஒரு தேமுதிக தொண்டனாக சொல்கிறேன்" என்றார்.