நீலகிரியை துவம்சம் செய்தது வரலாறு காணாத மழை.. அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செமீ மழை பொழிவு
Recommended Video
உதகை: நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது. முன்னதாக அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 82 செ.மீ மழை பெய்து இருந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 7 நாளாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் உள்பட மொத்த நீலகிரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் மழையால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். மின்சாரமும் பல இடங்களில் இல்லாததால் இருளில் மூழ்கி மக்கள் தவிக்கிறார்கள். வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவலாஞ்சியில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவாக 82 செ.மீ மழை பெய்தது. அதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது.இன்னும் மழை பெய்து வருகிறது. இதனால் அவலாஞ்சியை சுற்றியுள்ள பகுதிகயை வெள்ளம் சூழந்துள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது அங்கு 24 மணி நேரமும் பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்!
கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 10 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 180 குழந்தைகள் உள்பட 629 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் முகாம்களில் தங்கிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை மலைப்பகுதியில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஓரளவு சரி செய்து ஒருவாகனம் செல்லும் அளவுக்க போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக பந்தலூரிலிருந்து கேரளா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.