காம வெறியனிடம் சிக்கி கர்ப்பமான சிறுமி.. கருவை கலைக்க கூடாது என உத்தரவிட்ட ஹைகோர்ட்
12 வயது சிறுமியின் கருவை கலைக்க மதுரை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
Recommended Video
திண்டுக்கல்: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 12 வயசு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க கூடாது என்று மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகளுக்குதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு 12 வயது ஆகிறது.
விளையாடுவாள்
அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படிக்கிறாள். இவளது வீட்டுக்கு எதிரில் ஒரு புது பில்டிங் கட்டப்பட்டு வருகிறது. அங்குதான் சிறுமி எப்பவுமே விளையாடுவாள். அப்போது அந்த பில்டிங் வாட்ச்மேன் தாத்தாவுடன் பேசிக் கொண்டே விளையாடுவாள்.
70 வயது தாத்தா
அந்த தாத்தாவுக்கு 70 வயதாகிறது. ஒருநாள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் சிறுமி கட்டிடத்தில் விளையாட வந்தாள். அப்போது அந்த 70 வயது தாத்தா, சிறுமியிடம் வன்கொடுமையில் ஈடுபட்டு நாசம் செய்துவிட்டார்.
சிறுமி கர்ப்பம்
இதையடுத்து அந்த முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் விஷயம் இதோடு முடியவில்லை. சிறுமி கர்ப்பம் ஆனாள். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் உடனே தெரியவில்லை. கிட்டத்தட்ட 20 வாரங்கள் கழித்துதான் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தது.
கோரிக்கை
அதாவது கடந்த அக்டோபர் மாத இறுதியில்தான் மகள் கர்ப்பம் என்று கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர், அக்டோபர் 31ஆம் தேதியே மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்களிடம் மகளின் கருவை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஹைகோர்டில் வழக்கு
அவர்களும் சிறுமியை பரிசோதித்துவிட்டு, கரு 20 வாரங்களை கடந்துள்ளது. அதனால் கலைக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் மேலும் நொந்துபோன பெற்றோர், மதுரை ஹைகோர்ட்டில் கடந்த நவம்பர் 23ல் ஒரு வழக்கை தொடர்ந்தனர். எப்படியாவது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மருத்துவ பரிசோதனை
இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அவரோ, நீதிபதிகள் ஆர் சுப்பையா, பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்விற்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டார். திரும்பவும் இது சம்பந்தமான விசாரணை முதலில் இருந்து ஆரம்பமானது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
கருவை கலைக்க முடியாது
அதன்படி மருத்துவ அறிக்கை டிசம்பர் 11ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரு 30 வாரங்கள் அதாவது ஏழரை மாதங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதால் அதைக் கலைக்க முடியாது. என்றும், மீறி கலைத்தால், சிறுமியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு மருத்துவமனையின் அறிக்கையினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமும், 12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்து விட்டது.
தத்தெடுக்கலாம்
அதற்கு பதிலாக சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தை பெற்றெடுக்கும் வரையிலான செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும் குழந்தையை வளர்க்க முடியாவிட்டால் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையைத் தத்துக் கொடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
சர்ச்சை தீர்ப்பு
இந்த தீர்ப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. எத்தனையோ சாதாரண வழக்குகளில் எல்லாம் நள்ளிரவு விசாரணை, அவசர விசாரணை என்று நடைபெறும் நிலையில் ஒரு காம வெறியனிடம் சிக்கி கர்ப்பமாகிய சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்கும் முடிவை உடனடியாக எடுக்காமல் காலதாமதம் செய்துள்ளது சரியானதாக இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது.