திண்பண்டங்களை வாங்கி கொடுத்து 8 மாதமாக 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 3 பேர் கைது
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே 8 மாத காலமாக திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவந்த இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த சிலுவத்தூர் அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (37), கூலித்தொழிலாளி. 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்தார்.
பாலியல் பலாத்காரம்
இதை தெரிந்து கொண்டு அவருக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (65), குருநாதன் (70) ஆகியோரும் மாணவியை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
3 பேர் பலாத்காரம்
மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மூன்று பேரும் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியும் உயிருக்கு பயந்து இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
கொடுமை
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியை தங்கவேல் தனியாக அழைத்துச் செல்வதை பார்த்து மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியுள்ளார்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்றல் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.