பழனி அருகே அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்- 3 பேர் பலி; 20 பேர் படுகாயம்
பழனி: பழனி அருகே கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பழனியை அடுத்த தாழையூத்து அருகே சென்ற போது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.
லாரி பயங்கரமாக மோதியதில் அரசு பேருந்து பலத்த சேதமடைந்து சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து தகவல் அறிந்த சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பேருந்தில் சிக்கியிருந்த 20 பேரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 2 பேரின் அடையாளம் மட்டும் தெரிய வந்துள்ளது.
இறந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு, மற்றொருவர் அருப்புக்கோட்டை காரியாபட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ருக்கிரபாண்டி என உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 3-வது நபர் யார் என்பது தெரியவில்லை.
'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு
லாரி ஓட்டுநர் ராஜேஷ் தூக்க கலக்கத்தில் கண்ணை மூடியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் ராஜேஷ் படுகாயமடைந்த நிலையில் பழனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுனரின் சாமர்த்தியம்- உயிர் தப்பிய 20 பேர்
சென்னை மணலியில் இருந்து பிராட்வே வரை 56-டி மாநகரப் பேருந்து செல்கிறது. மணலி செல்லும் பக்கிங்காம் கால்வாய் மேம்பால பணி நடந்து வருவதால் தற்காலிக சாலையாக கெனால் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கெனால் சாலை பராமரிப்பின்றி மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இந்த சாலையில் களிமண் மற்றும் கழிவுகளை லாரியில் கொண்டு செல்கின்றனர். இதனால் லாரியிலிருந்து கழிவுகள் மற்றும் களிமண் அப்பகுதியில் உள்ள சாலையின் நடுவே சிதறி விழுந்து விடும்.
இத்தகைய சாலையில் 56டி மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்தார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே 10 அடி ஆழம் உள்ள நீர்நிலைக்குள் இறங்கியது ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பேருந்து நீர்நிலைக்குள் விழாமல் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 20 பேரும் இறக்கிவிடப்பட்டு மாற்று பேருந்தில் மணலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மணலி செல்லும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.