ரோட்டோரம் கிடந்த 9 மாத கர்ப்பிணி சடலம்.. வயிற்றில் இருந்த சிசுவும் மரணம்.. திருடர்களால் வீபரீதம்
ரோட்டோரம் 9 மாத கர்ப்பிணியின் சடலம் விழுந்து கிடந்தது
திண்டுக்கல்: ரோட்டோரம் சடலமாக விழுந்து கிடந்தார் 9 மாத கர்ப்பிணி சுஷ்மிதா.. இறந்து 5 மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டதால், வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது.
வேடசந்தூர் வசந்தநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். தனியார் மில் தொழிலாளி. இவருக்கு 2 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. மனைவி பெயர் சுஷ்மிதா.. 20 வயதாகிறது இப்போது, சுஷ்மிதா 9 மாச கர்ப்பிணி.
இந்நிலையில், கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது, மாமனார், மாமியாரை பார்ப்பதற்காக, ஒரு பையில், பழங்களை வாங்கிக் கொண்டு இன்று காலை வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் சுஷ்மிதா. அப்போது, சில மர்மநபர்கள் இவரை வழிமறித்து உள்ளனர்.
சுஷ்மிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியையும் பறிக்க முயன்றனர். ஆனால், அவர்களை சுஷ்மிதா கடுமையாக போராடி தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரப்பட்ட அந்த மர்ம நபர்கள், சுஷ்மிதாவை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே சுஷ்மிதா இறந்துவிட்டார். பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய தினேஷ்குமார் மனைவியை காணாமல் அவரை தேடி வயலுக்கு சென்ற போதுதான், காயங்களுடன் சடலமாக கிடந்த சுஷ்மிதாவை கண்டு அலறினார்.
குட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்!
கதறி அழுத அவர் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுஷ்மிதாவை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் உயிர் எப்போதோ போய்விட்டதாக சொன்னார்கள். சுஷ்மிதா இறந்து 5 மணி நேரம் ஆகிவிட்டதால் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது. இதனிடையே, வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சுஷ்மிதாவின் உறவினர்கள் திரண்டுவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையும் நடக்கிறது. உண்மையிலேயே சுஷ்மிதாவை நகைக்காகத்தான் கொன்றார்களா, அல்லது ஏதாவது முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா என விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ மணிமாறனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.