பலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: நாட்டில் பலாத்கார சம்பவங்கள் காலம் காலமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சீனிவாசன் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சைகளாகின. அண்மையில் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அழைத்து காலணியை கழற்றிவிட சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நாட்டில் பலாத்கார சம்பவங்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறதுதான். அதேபோல் ரூ5 லட்சத்தை ரூ10 கோடியாக மாற்றுவது என்பதும் நடைபெற்று வருவதுதான்.
மத்திய பாஜக அரசை நாங்கள் ஆதரித்ததால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ஊடகங்கள் பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கிறோம் என எழுதுகிறார்கள். தமிழகத்தில் இப்போதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் எங்கேயாவது குண்டு காயம் ஏற்பட்டு யாரும் இறந்தாங்கன்னு செய்தி வருகிறதா? அஸ்ஸாம் மாநிலத்துக்கு யார் யாரெல்லாம் வந்துள்ளனர்? என்பதை அறிவதற்கான அடையாளச் சீட்டாகதான் குடியுரிமை சட்டத்தை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ரேசன் கார்டு கொடுக்கத்தான் குடியுரிமை சட்டம். இதில் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சீனாவின் அதிபர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அப்போது சீனா அதிபரும் பிரதமர் மோடியும் தமிழக அரசை பாராட்டினர். முதல்வர் எடப்பாடி அரசு, தமிழக மக்களை அன்பாகப் பார்த்து கொள்வதாக கூறினார்கள். இப்படி ஒரு மாநிலத்தையே பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.
முதல்வரையும் துணை முதல்வரையும் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார். நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.