முதல்வராக போகிற... ஸ்டாலின் குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம்- திருத்திய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: அடுத்து முதல்வராக வர போகிறவர் ஸ்டாலின் என வேடசந்தூர் சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமசிவம் வாய்தவறி பேசியது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
Recommended Video
திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் பேசுகையில் ஸ்டாலினைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நாளைக்கு முதல்வராக கூடிய ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் எனக் கூறினார். இதைப் பார்த்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அதிர்ச்சியாகி பரமசிவத்தை பார்த்து மாற்றி சொல்லுமாறு கூறினார்.
கூட்டம்
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பரமசிவம், வரலாற்று பிழை இழைத்து விட்டேன். எனது வாயை டெட்டால் மற்றும் பினாயில் கொண்டு கழுவுவேன் என மேடையிலேயே பேசினார். இதனால் அந்த கூட்டத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டது.
மன்மோகன் சிங்
இதையடுத்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்- திமுக கூட்டணிதான். நீட் தேர்வை கொண்டு வந்தவர் பிரதமர் முலாயம் சிங் என கூறிவிட்டு சுதாரித்துக் கொண்ட திண்டுக்கல்லார் மன்மோகன் சிங் என கூறினார்.
வாடிக்கை
இது போல் ஒவ்வொரு முறையும் பொதுக் கூட்டங்களில் எதையாவது உளறுவதையே திண்டுக்கல்லார் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் இம்முறை அதிமுக எம்எல்ஏ பரமசிவம் தவறுதலாக பேசிவிட அது ஹைலட்டாகிவிட்டது. இருவரின் பேச்சையும் கேட்ட பொதுமக்கள் சிரித்தனர்.
ஆப்பிள் சின்னம்
பாமகவின் சின்னம் மாம்பழம் என்பதற்கு பதிலாக ஆப்பிள் என்றும் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி மாற்றி பேசியிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போல் சீனியர் அமைச்சரே உளறினால் என்ன செய்வது என அதிமுகவினர் முணுமுணுக்கிறார்கள்.