விஜயகாந்த் வரட்டும்.. வாயை திறக்கட்டும்.. பிறகு இருக்கு.. பிரேமலதா பலே பேச்சு
விஜயகாந்த் பேசி ஆரம்பித்தால் கட்சிகள் காணாமல் போகும் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
Recommended Video
கொடைக்கானல்: விஜயகாந்த் மட்டும் பேச ஆரம்பிக்கட்டும், இப்போ இருக்கிற எல்லா கட்சிகளும் காணாமல் போய்விடும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தாக்கத்தின்போது அளவுக்கு அதிகமாக பாதிப்புக்கு உள்ளானது கொடைக்கானலும்தான். ஏனென்றால் இதன் வழியாகத்தான் புயல் கடந்து சென்றது.
இதனால் அங்கு சேதமடைந்த பகுதிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று நேரில் பார்வையிட்டார். பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விமர்சனம்
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா தமிழக அரசை பலமாக தாக்கி பேசினார். குறிப்பாக கஜா புயல் பாதிப்பு பணிகளில் அதிமுக அரசை விமர்சித்தும் கருத்து கூறினார். அப்போது அவர் பேசியதாவது:
குறைகளை கேட்டோம்
"நாங்க எதிர்க்கட்சியில் இல்லைதான்.. ஆனாலும் புயல் பாதிப்பை நேரடியாக கேட்டோம். நாகை, வேதாரண்யம், தஞ்சை என பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றோம். அங்கு பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டோம். இப்போது கொடைக்கானலுக்கு வந்திருக்கிறோம்.
ஏன் வரவில்லை?
இங்கே ஆளுங்கட்சியும் வரவில்லை, எதிர்க்கட்சியும் வரவில்லை. ஆனால் நாங்க வந்திருக்கிறோம். இதே தொகுதியிலதான் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். ஆனால் இன்னும் இங்கே வரவில்லையே ஏன்?
சுற்றுலாவா?
நேரடியாக போய்தானே புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்யணும்? முதல்வரும், துணை முதல்வரும் ஹெலிகாப்டரில் சுற்றுலா போய்விட்டு வந்திருக்கிறார்கள். எனவே ஹெலிகாப்டரில் போனது மக்கள் குறைகளை கேட்க கிடையாது.
பதில் சொல்வார்கள்
ஜெயலலிதாவை போல் இவங்களும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசைபட்டு போயிருக்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் சேர்த்து வரப்போகிற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்." இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
விஜயகாந்த் வரட்டும்
விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவருக்கு தற்போது 2-ம் கட்ட சிகிச்சை நடந்து வருகிறது. விரைவில் முழு உடல் தகுதி பெற்றவுடன் மக்களை பார்க்க வருவார். அவர் பேச ஆரம்பித்தால் தற்போது உள்ள கட்சிகள் காணாமல் போய்விடும். இன்னமும்கூட தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது" என்று பதிலளித்தார்.