எமலோகத்தில் இடமில்லை ஹவுஸ்புல்.. எல்லாரும் வீட்லயே இருங்கள்.. கெஞ்சும் எமதர்மன்.. நூதன விளம்பரம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு நூதன விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சிரிப்பையும், சிந்திப்புத் திறனையும் அதிகரிக்கிறது.
Recommended Video
கொரோனா என்ற பெரிய அரக்கனுக்கு எதிராக உலக நாடுகள் ஏதேதோ வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. எப்படியாவது இந்த அரக்கனை அழிக்க வேண்டும். எந்த வகையிலாவது நரகாசுரன் என்ற தடுப்பு மருந்து கிடைக்காதா என ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சமூக பரவலை தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்
ஆனால் பெரும்பாலானோர் இந்த உத்தரவை மதிப்பதே இல்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டு வரும் நிலையில் பால் வாங்க ஒரு முறை, காபித் தூள் வாங்க ஒருமுறை, காய்கறி வாங்க ஒரு முறை, மருந்து வாங்க இன்னொரு முறை என எதற்கு சொல்கிறார்கள் என புரிந்து கொள்ளாமல் திருப்பி திருப்பி சாலைகளில் பலர் சுற்றி வருகிறார்கள்.
சென்னைக்கு அடுத்த இடம்
கொரோனா என்பது தொற்று நோய். இது ஒருவருக்கு பரவினால், அப்படியே அவருடன் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் பரவும் என்ற "சீரியஸ்னஸ்" இல்லாமல் இருக்கிறார்கள். இத்தனை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. திண்டுக்கல்லில் கொரோனாவால் இதுவரை 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்த இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது.
விழிப்புணர்வு இல்லை
இங்கு பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இது போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளியே வரும் பொதுமக்களை போலீஸார் தண்டித்து வருகிறார்கள். எனினும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை.
எமதர்மன் விளம்பரம்
இந்த நிலையில் திண்டுக்கல் நகர தெற்கு போலீஸார் சார்பில் ஒரு நூதன விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் எருமை மீது வரும் எமன் இரு கைகளை கூப்பி கூறுவது போல் உள்ளது. ஹவுஸ்ஃபுல் எமலோகத்தில் இடமில்லை. தயவுசெய்து வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம். Please Stay @ Home. மக்கள் நலனில்- திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.