ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா!
முஜீப் பிரியாணி கடையில் 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது
திண்டுக்கல்: 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், இன்று காலை முதலே பிரியாணி கடையில் கூட்டம் முண்டியக்க ஆரம்பித்துவிட்டது.
2 வாரத்துக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் பரவியது. அதில், திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில், அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசா கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அப்போது இதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். ஏனென்றால் 5 பைசா புழக்கத்திலேயே இல்லை.. அதை இப்ப இருக்கும் தலைமுறையினர் பார்த்ததுகூட இல்லை. 5 பைசாக்கு எங்க போவது என்று நினைத்து கொண்டு இதை கண்டுக்காமல் விட்டுவிட்டனர்.
100 நபர்கள்
ஆனால், இது உண்மையான விளம்பரம் என்பது இன்றைக்குதான் மக்களுக்கு தெரிந்தது. 5 பைசா கொண்டு வந்தால் அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும், என்றும், முதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது மக்கள் மனதில் விரைந்து சென்றது.
5 பைசா நாணயம்
வழக்கமாக மதியம் 12 மணிக்குமேலதான் எந்த பிரியாணி கடையிலும் பிரியாணி கிடைக்கும். ஆனால் இந்தஅறிவிப்பினால், காலை 10 மணிக்கே கடை முன்பு மக்கள் கூடிவிட்டனர். ஆண், பெண் என எல்லாருமே வரிசையில் வந்து நின்றனர். அவர்களின் கையில் 5 பைசா நாணயம் இருந்தது. அறிவித்தபடியே 5 பைசா நாணயத்தை வாங்கி கொண்டு, முதல்100 பேரக்கு பிரியாணி பொட்டங்கள் வழங்கப்பட்டன.
பழமை பொருட்கள்
இப்படி ஒரு விளம்பரமா என்று கடை ஓனர் ஷேக் முஜிபூர் ரகுமானிடம் கேட்டதற்கு, "நாம் உணவின் தேவையை அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பெருமை
செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம். எப்படியும் வீட்டு பெரியவர்கள் வைத்திருந்து இருப்பார்கள், அல்லது பொக்கிஷம் போல சேமித்து இருப்பார்கள் என்று தெரியும், அதனால்தான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு. எல்லார் கையிலும் 5 பைசாவை பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது" என்றார்.