தமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்
திண்டுக்கல்: தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் கேம் சேஞ்சராக இருப்பார் என பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். குடியுரிமை சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து மகிழ்ச்சியளிப்பதாகவும், தேச பக்தி உள்ள ஒவ்வொருவரும் அவர் கூறிய கருத்தை வரவேற்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் ரஜினிகாந்த் ஒரு மாற்றத்தை, திருப்புமுனையை கொண்டுவருவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இருந்து விலகி இருப்பது தான் ரஜினிகாந்த்துக்கு நல்லது என்றும், அவரிடம் ஆலோசனையோ, கருத்தோ கேட்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை எனவும் கூறினார். குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரத்தை பரப்பி கலவரத்தை உண்டு செய்யக்கூடிய வகையில் நடந்து கொள்வதாகவும், சி ஏ ஏ மூலம் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது தான் உண்மை நிலை எனவும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் கூறினார்.
குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் உள்ளவர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல என்றும், இது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான சட்டம் எனவும் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமியர்கள் கவலைப்பட தேவையில்லை எனக் கூறினார். ப.சிதம்பரத்திடம் இருந்து எவ்வளவு தூரம் ரஜினிகாந்த் விலகி இருக்கிறாரோ அவ்வளவு தூரம் அவருக்கு நல்லது எனத் தெரிவித்தார். சி ஏ ஏ விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டின் தான் ரஜினியும் இருக்கிறார் எனக் கூறினார்.
காஷ்மீர் சிங்கம் என்றழைக்கப்பட்ட சேக் அப்துல்லா பெயரில் கொடைக்கானலில் உள்ள மாளிகையின் பெயரை சுப்பிரமணியன் சிவா என மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கோஹினூர் மாளிகையில் சேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டதன் நினைவாக சேக் அப்துல்லா மாளிகை என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மாளிகையின் பெயரை மாற்றவேண்டும் என பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.