கேட் கீப்பரை அதிமுக எம்.பி. அடித்தாரா.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. மருத்துவமனையில் எம்.பி!
ரயில்வே கேட் கீப்பரை தாக்கியதாக அதிமுக எம்பி உதயகுமார் மீது புகார்
திண்டுக்கல்: "எம்பி வர்றேன்... கேட்டை ஏன் மூடினே?"-ன்னு கேட்டு என்னை அடித்துவிட்டார் என்று கேட்கீப்பர் புகார் சொல்ல... "இல்லை.. இல்லை.. என் நெஞ்சுமேல கை வெச்சி கேட்கீப்பர்தான் என்னை அடிச்சிட்டார்" என்று மறு புகார் சொன்னதுடன், எம்.பி. ஆஸ்பத்திரியிலேயே போய் படுத்தும் கொண்டார்!
திண்டுக்கல் மாவட்டத்தில் அழகம்பட்டி ரயில்வே கேட் உள்ளது. இங்கு கேட் கீப்பராக மணிமாறன் என்பவர் வேலை பார்க்கிறார். 36 வயதாகிறது.
இவர் நேற்று வழக்கம்போல் டியூட்டியில் இருந்தார். அப்போது, சாயங்காலம் 5 மணிக்கு, திருச்செந்தூர் - பாலக்காடு பாசஞ்சர் ரயில் ஒன்று கடக்கும். அதனால் கேட்டை வழக்கம்போல் மூடினார்.
10 வயசு சிறுமி.. மிரட்டி மிரட்டியே பாலியல் தொல்லை.. சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது
கேட்டை மூடினார்
அந்த நேரம் பார்த்து, கேட் அருகில் திண்டுக்கல் தொகுதி அதிமுக எம்பி உதயகுமாரின் கார் வந்து நின்றது. கூடவே அவரது ஆதரவாளர்கள் கார்களும் வரிசையாக நின்றன. கேட்டை திறக்க சொல்லி எம்பி சொல்ல.. ரயில் போனபிறகுதான் திறந்துவிட முடியும் என்று மணிமாறன் சொல்லி இருக்கிறார். இதுதான் பிரச்சனையாக வெடித்திருக்கிறது. ரயில் கடந்து சென்றதும் மணிமாறன் கேட்டை திறந்து விட்டார்.
எம்.,பி வர்றேன்
ஆனால் காரில் இருந்து எம்பி உதயகுமார் இறங்கி வந்து, "எம்பி வர்றேன்.. நீ எப்படி கேட்டை மூடினாய்" எனக்கூறி சரமாரியாக தாக்கினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மணிமாறன், சத்தம் போடவும், அந்த பகுதி மக்கள் உட்பட ரயில்வே ஊழியர்களும் விரைந்து வந்தார்கள். ஆனால் அதற்குள் எம்பி உடனடியாக காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்.
ஆர்ப்பாட்டம்
உடனே பொதுமக்கள், மணிமாறன் தாக்கப்பட்டதை கண்டு ஆத்திரப்பட்டு, எம்பியை கண்டித்து ரெயில்வே கேட்டின் ரெண்டு பக்கமும் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தகவலறிந்து அம்மையநாயக்கனூர் போலீசாரும் வந்து பொதுமக்களிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தார்கள். ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிடவே இல்லை.
நடுவழியில் நின்றது
இரவு 7.23-க்கு வந்து கொண்டிருந்த மதுரை - திண்டுக்கல் பாசஞ்சர் ரயில் சிக்னல் கிடைக்காமல் பாதி வழியில் நின்றது. அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்ததினால் 10 நிமிஷம் வழிவிட்டார்கள். ரயில் சென்றுவிட்டது. திரும்பவும் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 8.50-மணிக்கு வந்த மைசூர் ரயிலும் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது. திரும்பவும் ரயிலுக்கு வழிவிட்டனர் மக்கள்.
போலீசில் புகார்
ஆனாலும் போராட்டத்தை மக்கள் விடவே இல்லை. "எம்பி. இப்போ, இங்கே வரும்வரை நாங்க போக மாட்டோம்" என்று சொல்லி தர்ணாவில் உட்கார்ந்துவிட்டனர். இதெல்லாம் ஒரு பக்கம் இவ்வளவு நடந்து கொண்டிருக்க, எம்பி உதயகுமார் அம்மையநாயக்கனூர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "கேட் கீப்பர் மணிமாறன் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டை கேட்டுக் கொண்டே கதவை திறந்தார்.
நெஞ்சில் அடித்தார்
இதை நான் கண்டித்தேன். "ஏன் கவனக்குறைவா வேலை பாக்கறே"ன்னு சொன்னேன். உடனே கோபப்பட்ட மணிமாறன் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி, என் நெஞ்சிலேயே என்னை தாக்கிவிட்டார். எனக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டு விட்டது. நெஞ்சு வலிக்கிறது. இதற்காக நான் அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றேன்'' என சொல்லி இருக்கிறார்.
ஆஸ்பத்திரியில் அட்மிட்
இதேபோல மணிமாறனும் எம்பி மீது புகார் கொடுத்துள்ளார். இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இப்போது எம்பி திண்டுக்கல்லில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்.