மைக்கை பிடித்து பேச போன வேலூர் இப்ராஹிம்.. திரண்டு வந்த நாம் தமிழர் கட்சி.. கொடைக்கானல் பரபரப்பு
வேலூர் இப்ராஹிமை பிரச்சாரம் செய்ய விடாமல் நாம் தமிழர் கட்சியினர் தடுத்தனர்
திண்டுக்கல்: பாஜகவிற்கு பிரச்சாரம் செய்ய வந்த வேலூர் இப்ராஹிமிற்கு, நாம் தமிழர் கட்சியும் மனித நேய மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் பாஜக சார்பில் குடியரசு தின விழாவுக்கு ஏகத்துவ பிரசார ஜமாத் கட்சியின் தலைவர் வேலூர் இப்ராஹிம் அழைக்கப்பட்டிருந்தார்... மூஞ்சிக்கல் பகுதியில் பாஜக நிர்வாகிகளுடன் வாகனத்தில் அவர் பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அவரை பேச சொல்லி அந்த பகுதியினர் சொல்லவும், இப்ராஹிமும் மைக்கை பிடித்து பேச போனார்.. ஆனால் அதற்குள் அங்கு நாம் தமிழர் கட்சியினரும், மனித நேய மக்கள் கட்சியினரும் வந்துவிட்டனர்.. இப்ராஹிம் பேச கூடாது என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்தனர்...
மேலும், இப்ராஹிமை கீழே இறங்குமாறும் சொன்னார்கள்.. ஆனால் இப்ராஹிம் தொடர்ந்து பேச முயன்றார். இதனால், ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர், பிரசார வாகனத்தை முற்றுகையிட முயன்றனர்.. அதற்குள் சுற்றியிருந்த பாஜகவினர் எதிர்பார்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.. மேலும் இப்ராஹிமை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.
நிலைமை விபரீதமாதவற்குள் போலீசார் விரைந்து வந்து இப்ராஹிமை அந்த வேனில் இருந்து இறக்கி, பக்கத்தில் இருந்த கடை ஒன்றில் பாதுகாப்பாக உட்கார வைத்தனர்.. பின்னர், இப்ராஹிம் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் என சுமார் 40 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.