உச்சத்துக்குப் போகும் கொரோனா- உஷாராக இப்பவே லாக்டவுனுக்கு தயாரான திண்டுக்கல்
திண்டுக்கல்: கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்களை தாங்களாகவே முன்கூட்டியே மூடிவிடுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது. எந்த நிமிடத்திலும் லாக்டவுன் அமலாக்கப்பட்டுவிடும் என்பதால் இப்போதே அதற்கு தயாராகி வருகிறது திண்டுக்கல்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மரண அச்சத்தை உருவாக்கி இருக்கிறது கொரோனா. அங்கு கொரோனா பரவுவதைத் தடுக்க முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா நிதி விவரங்களில் மறைப்பதற்கு எதுவும் இல்லை: ஹைகோர்ட்டில் தமிழக அரசு
முழு லாக்டவுன்
இதேபோல் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் லாக்டவுன் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்களுக்கு உள்ளேதான் போக்குவரத்தும் அமலில் உள்ளது. இந்த மாவட்டங்களில் அண்டை மாவட்டமான திண்டுக்கல்லும் லாக்டவுனுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது.
திண்டுக்கல்லில் அதிகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 377 ஆக அதிகரித்திருக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புகிறவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இங்கு அதிகமாகி வருகிறது. திண்டுக்கல்லில் இன்றும் கூட ஓசூரில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்புக்கான சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
எந்த நிமிடத்திலும் லாக்டவுன்?
இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலும் எந்த நேரத்திலும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்கிற நிலைமை நிலவுகிறது. திண்டுக்கல் நகரம் மட்டுமின்றி இதர சிறுநகரப் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக 6 மணிக்கு முன்னதாக அனைத்து கடைகளையும் மூடுவதை வாடிக்கையாகவும் வைத்திருக்கின்றனர்.
வெறிச்சோடும் திண்டுக்கல் வீதிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் லாக்டவுன் அமலாக்கப்படுவது குறித்து அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆலோசனையும் நடத்தவில்லை. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மெல்ல திரும்பிய இயல்பு வாழ்க்கை திண்டுக்கல்லில் மீண்டும் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.