அன்று தோனி.. இன்று நட்டு - பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்த நடராஜன்
பழனி: இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து இருப்பவர் நடராஜன். தமிழகத்தைச் சேர்ந்த நட்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக யார்க்கர்ஸ் மழை பொழிய ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
உடனடி பலனாக, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பவுலராக அனுப்பி வைக்கப்பட்ட நடராஜனுக்கு முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் விளையாடும் ஜாக்பாட் அடித்தது.
வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திய நடராஜன், டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் சிறப்பாக பங்காற்றினார். குறிப்பாக டி20, ஒருநாள் கிரிக்கெட் போல, அவரால் டெஸ்ட்டில் அந்தளவுக்கு பெர்ஃபார்ம் பண்ண முடியாது என்று சொன்னவர்கள், சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்குள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில், நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்திருக்கும் புகைப்படம் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. தனது நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு அவர் முருகன் சன்னதியில் மொட்டை அடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மொட்டை அடித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அவர் மொட்டை தலையுடன் கோப்பையை கையில் ஏந்திய காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் மொமன்ட் ஆக உள்ளது.
அதேபோல், பத்து வருடம் கழித்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன் பெயரை நிலைநாட்டிய நடராஜன், மொட்டை அடித்த புகைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் இதனை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.