வாட்ஸ் அப்பை விட சூப்பர் செயலி, அதிரவைத்த துப்பாக்கிச் சூடு-திண்டுக்கல் மாவட்டத்தின் 2020-ன் டாப் 10
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் 5 பேர் பலி தொடங்கி வாட்ஸ் ஆப் செயலியை விட சூப்பர் ஆப் கண்டுபிடித்த சாதனை மாணவர் என திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ல் நிகழ்ந்த டாப் 10 நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.
Recommended Video
1) திண்டுக்கல்- மதுரை வழிச்சாலையில் கொடைரோடு அருகே ஒரு கார் சைக்கிள் மற்றும் மற்றொரு கார் மீது அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் மொத்தம் 5 பேர் பலியானது இந்த ஆண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த கோர சம்பவமாகும்.
2) திண்டுக்கல் எஸ்.பி.யாக ரவளி பிரியா நியமிக்கப்பட்ட போதுதான் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் பெண்களே இருக்கிறார்கள் என்ற செய்தி பேசுபொருளானது. மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி, மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா, மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட திட்ட இயக்குநராக கவிதா என ஏற்கனவே பெண்களே உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
3) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் லத்திகா என்ற கல்லூரி மாணவி, பிறந்த நாள் கொண்டாடிய மகிழ்ச்சி ஓய்வதற்குள் பேய் தன்னை அழைப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
4) கொரோனா லாக்டவுன் காலத்தில் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்டோர் சென்று மீன்பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
5) திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்துவின் மகன் பிரனேஷ் என்பவர் கூகுள் நிறுவனம் நடத்திய கோடிங் வகுப்பில் பயின்றார். 9-ம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவர் வாட்ஸ் ஆப்பைவிட சிறப்பாக செயல்படும் செயலியை கண்டுபிடித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்.
6) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி ஆடலூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி மாலதி, 2-வது கணவர் சதீஷுடன் ஏற்பட்ட தகராறில் டீ கடை ஒன்றின் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததும் செல்போனில் பதிவு செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
7) தமிழ்நாடு அரசுப் பேருந்து நடத்துநர் சிவசண்முகம், பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணர்வு குறித்து பயணிகளிடம் கனிவாக பேசும் வீடியோ அனைவரது கவனத்தையும் பெற்றது.
8) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடத்திய துப்பாக்கிச் சூடு சிசிடிவி காட்சிகள் அனைவரது நெஞ்சையும் உறைய வைத்தது. இதில் ஒருவர் பலியானார்.
9) திண்டுக்கல் மாவட்டத்தில் குரங்குகளுக்கு காவலர் ஒருவர் உணவளித்து பசியாற்றிய வீடியோ வைரலானது.
10) ஆண்டின் கடைசியில் திண்டுக்கல்லுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நிகழ்ச்சி முடிந்த பின்னர் வடிவேலு காமெடி பட காட்சியைப் போல பாண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.