நிலக்கோட்டையில் முடிந்தால் ஜெயித்துப் பார்...? அதிமுகவுக்கு சவால் விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர்..!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் முடிந்தால் ஜெயித்துப்பார் என அதிமுகவுக்கு சவால் விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் தேவேந்திர குல வேளாளர்களில் யாருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாதது பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிமுகவை புறக்கணிப்போம் என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டி அண்மையில் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
லெப்ட் சிக்னல் போட்டு ரைட்டில் போகுதா.. திமுகவின் "சீக்ரெட்" திட்டம்.. கலக்கத்தில் "எதிர்" கட்சிகள்
அதிமுக எம்.எல்.ஏ.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுகவுக்கு நேரடியாக சவால் விடுத்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அந்தப் பகுதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை சேர்ந்த தேன்மொழி சேகர் நிலக்கோட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் அங்கு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது தலைமைக்கு மிகுந்த கோபத்தை கொடுத்திருக்கிறது. அதிருப்தியாளர்களை அழைத்துப் பேசி சமாதானம் செய்யாமல் போஸ்டர் ஒட்டும் வரை எம்.எல்.ஏ. வேடிக்கை பார்த்ததை நினைத்து அதிமுக தலைமை நொந்துக்கொண்டுள்ளது.
என்ன உள்ளது?
இதனிடையே அந்த போஸ்டரில் அதிமுகவை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியதாகவும் ஆனால் கட்சியோ நெஞ்சில் குத்தியதை போல் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை ஒன்றிய அளவில் தேவேந்திர குல வேளாளர்களாகிய தங்களில் ஒருவரை பொறுப்பாளராக அறிவிக்காமல் வெறுத்து நிராகரித்த அதிமுக கட்சியை தாங்களும் நிராகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் முடிந்தால் எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தி ஜெயித்துப்பார்? என சவாலும் விடுக்கப்பட்டுள்ளது.
சமாதான முயற்சி
இதனிடையே இந்த விவகாரம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கவனத்திற்கு சென்றதை அடுத்து போஸ்டர் சர்ச்சை தொடர்பாக விசாரித்திருக்கிறார். மேலும், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சரிகட்டும் பணிகளையும் அவர் தொடங்கியிருக்கிறார். உரிய நேரத்தில் உரிய பதவி வழங்கப்படும் என நத்தம் விஸ்வநாதன் தரப்பில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெல்லமண்டி நடராஜன்
இதேபோல் திருச்சியில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் பெயரில் கடந்தவாரம் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இஸ்லாமியர்களுக்கு பதவி மறுக்கப்படுவதாகவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதால் இஸ்லாமியர்களும் அதிமுகவை புறக்கணிப்போம் எனவும் அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. விசாரணையில் பதவி கிடைக்காத அதிமுக பிரமுகர் ஒருவர் ஏற்பாட்டில் அந்த போஸ்டர் ஒட்டபட்டது தெரிய வந்தது.