மீண்டும் உயிர்தெழுவார்.. இறந்த பெண் காவலரின் உடலுடன் 20 நாட்களாக பூட்டிய வீட்டில்.. திண்டுக்கல் ஷாக்
திண்டுக்கல்: திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பெண் காவலர் அன்னை இந்திரா உயிரிழந்த நிலையில், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் எனக் கூறி அவரது குடும்பத்தினர் அவரது உடலுடன் 20 நாட்களுக்கும் மேலாக பூட்டிய வீட்டுக்குள்ளேயே தங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தேனியை சேர்ந்த பால்ராஜ் என்பவரோடு இவருக்குத் திருமணம் நடந்தது.
இருவருக்கும் 13 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அன்னை இந்திரா மதம் மாறி உள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பால்ராஜ் , அன்னை இந்திரா அவை பிரிந்து சென்றுள்ளார்.
போதை மருந்து வாங்கிக் கொடுக்காததால் புவனேஸ்வரி செய்த விபரீதம்! கள்ளக்காதலன் அதிர்ச்சி
உடல்நலக்குறைவு
இதையடுத்து திண்டுக்கல் நந்தவணப்பட்டி டிரசரி காலனி பகுதியில் தனது இரு குழந்தைகளுடன் வாடகைக்கு தங்கி இருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
நேரில் வந்த பெண் போலீஸ்
இதையடுத்து அவரது சகோதரி சகுந்தலா என்பவர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அன்னை இந்திரா உள்ளிட்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், விருப்ப ஓய்வு பெற்றதற்கான ஆணையை வழங்குவதற்காக பெண் காவலர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
20 நாட்கள்
வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை திறந்து பார்த்தபோது அன்னை இந்திரா இறந்து இருபது நாட்களுக்கும் மேலாகி நிலையில் உடல் அழுகி கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலுடன் சகோதரி சகுந்தலா இரு குழந்தைகள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரான சுதர்சன் ஆகியோர் 20 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்தது.
மதபோதகர்
இதையடுத்து மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சுயநினைவை இழந்த அன்னை இந்திரா படுக்கையிலேயே மயங்கி உள்ளார். ஆனால் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றால் கர்த்தர் ரட்சிக்க மாட்டார் எனக்கூறிய மதபோதகர் சுதர்சன், ஜெபம் செய்வதாகக் கூறி அவர்களுடன் தங்கியுள்ளார்.
பொருட்கள்
அப்போதிருந்து அவர் கண்விழிக்காத நிலையில் சில நாட்களில் உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து வீட்டை பூட்டிக்கொண்டு 20 நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். வீட்டிற்கு தேவையான பொருட்களை அவ்வப்போது சுதர்சன் வெளியே வந்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதிர்ந்த போலீஸ்
உடலுடன் தங்கியிருந்த இருந்த அன்னை இந்திராவின் சகோதரி மற்றும் குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது, அன்னை இந்திரா இறக்கவில்லை என்றும் அவர் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர் உயிர்த்தெழுந்து வருவார் எனக் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மதபோதகர் சுதர்சன் சகோதரி சகுந்தலா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அதிர்ச்சி
தாய் இறந்தது கூட தெரியாமல் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என கூறியபடியே குழந்தைகள் முகத்தில் எவ்வித சலனமும் இன்றி அப்பகுதியில் சுற்றி திரிந்தது திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.