"அல்லேலுயா".. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ்
பூட்டிய வீட்டிற்குள் சடலத்துடன் 20 நாட்கள் இருந்த 2 பேர் கைதாகி உள்ளனர்
திண்டுக்கல்: ஒரு பிணத்தை பூட்டிய வீட்டுக்குள் போட்டுக் கொண்டு, அவர் மறுபடியும் உயிர்தெழுவார் என்று நம்பிக் கொண்டு, ஜெபம் செய்திருக்கிறார் ஒரு பாதிரியார்.. இதற்கு அந்த அக்காளும் உடந்தை!
திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா.. 38 வயதாகிறது.. திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தார்.
இவரது கணவர் பால்ராஜ்.. அவருக்கு 43 வயசாகிறது.. இவர்களுக்கு ரட்சகன் என்ற 12 வயது மகனும், மெர்சி என்ற 8 வயது மகளும் உள்ளனர். ஆனால், இந்த தம்பதி கடந்த சில வருஷங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.. ஏதோ கருத்து வேறுபாடாம். இந்திரா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால், இந்த பிரிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்காக "மட்டும்" விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர்
டியூட்டி
இந்நிலையில், அன்னை இந்திராவுக்கு பல வருடங்களாகவே உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது.. அதனால் அவரால் சரியாக டியூட்டிக்கு போக முடிவதில்லை.. நிறைய லீவு எடுத்து வந்தார். ஒருகட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவிடம் விண்ணப்பம் அளித்தார்... இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை, திண்டுக்கல்லில் உள்ள கன்ட்ரோல் ரூமுக்கு டிரான்ஸ்பர் செய்தார்.
உடல்நலம்
எனினும், கடந்த நவம்பர் 16-ந் தேதி முதல் அன்னை இந்திரா மெடிக்கல் லீவ் எடுத்தார்... தன் அக்கா வாசுகி வீட்டுக்கு 2 குழந்தைகளை அழைத்து கொண்டு ஓய்வுக்காக சென்றார்.. அக்கா வாசுகி வீட்டில் குடும்ப நண்பரான சுதர்சனமும் வசித்து வருகிறார். சுதர்சனம் ஒரு பாதிரியார். இதனிடையே, இவர் விடுமுறை முடிந்து கடந்த 26-ந்தேதி டியூட்டியில் சேர வேண்டும். ஆனால் அவர் வேலைக்கு போகவில்லை.
துர்நாற்றம்
அதனால், நேற்று காலை 2 பெண் போலீசார் அவருக்கு உடல்நலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.. வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது... ஆனால் குப்பென்று நாற்றம் அடித்தது.. குடலை புரட்டும் நாற்றம் வரவும், சந்தேகம் அடைந்த பெண் போலீசார், உடனடியாக தாடிக்கொம்பு ஸ்டேஷனுக்கு தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்... அப்போது இந்திரா சடலமாக கிடந்தார்.
அழுகிய நிலை
அவரது பிணம் ஒரு துணியால் மூடப்பட்டு இருந்தது. அந்த துணியை போலீசார் விலக்கி பார்த்தனர்... அதை பார்த்ததும் அரண்டுபோய்விட்டனர்.. உடல் ரொம்பவே அழுகி விட்டிருந்தது.. அங்கு நிற்ககூட முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. மேலும் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த உடலை மீட்கவும் முடியவில்லை. அவரது தலைமுடி மொத்தமும் கொட்டி போய் உள்ளது.. அதனால், அந்த இடத்திலேயே வைத்து போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது..
விசாரணை
இதன்பிறகு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது... அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த ஒரு போர்டு முன்னாடி போய் நின்றுகொண்டது... அந்த போர்டில் மத பிரச்சாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதற்கு பிறகுதான், அன்னை இந்திராவின் அக்கா, அவருடன் இருந்த பாதிரியார் சுதர்சனிடம் சந்தேகம் திரும்பியது.. விசாரணையும் ஆரம்பமானது.. பாதிரியாரும், அந்த அக்காவும் சொன்னதை கேட்க கேட்க போலீசார் ஆடிப்போய் விட்டனர்.
பிணம்
இந்திரா கடந்த மாதம் 7-ந்தேதியே இறந்து போய்விட்டாராம்.. அப்போதே உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது.. ஆனால், இவர்கள் இறந்த உடலை கொண்டு போய் அடக்கம் செய்யாமல், மறுபடியும் இந்திரா உயிர்த்தெழுந்துவிடுவார் என்று நம்பிக் கொண்டு இருந்துள்ளனர். எந்நேரமும் அந்த பிணத்துக்கு பக்கத்திலேயே 2 பேரும் உட்கார்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.. வீட்டிற்கு தேவையான பொருட்களை, பாதிரியார் மட்டும் அடிக்கடி வெளியே சென்று வாங்கி தந்துள்ளார்.. அந்த 2 குழந்தைகளும், இதே பிணத்துடன் அந்த வீட்டிலேயே இத்தனை நாளும் இருந்திருக்கிறார்..
விசாரணை
இப்போதுகூட சுதர்சனும், வாசுகியும், "இந்திரா சாகவில்லை.. தற்போது ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கிறார்.. ஏசு கிறிஸ்துவை போலவே அவரும் உயிர்த்தெழுந்து விடுவார்.. அதனால், அவரது உடலை எங்களிடமே தந்துவிடுங்கள்" என்று என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தார்களாம்.. இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரையும் தாடிக்கொம்பு ஸ்டேஷனில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.