காளியம்மனிடம் சேர்ந்துவிட்ட களம்பல கண்ட ’காளி’.. கண்ணீர்வடிக்கும் திண்டுக்கல்வாசிகள்!
திண்டுக்கல்: ஜல்லிக்கட்டு களங்களில் மாடுபிடி வீரர்களை 'தெறிக்கவிட்டு’ பல பரிசுகளை அள்ளி வந்த திண்டுக்கல் காளை காளி உடல்நலக் குறைவால் காலமான செய்தி அப்பகுதி மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் திண்டுக்கல் 'காளி’ களமிறங்கினாலே மாடுபிடி வீரர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். அப்படி காளியை தொட்டுவிட்டாலே போதும்.. ஆக்ரோஷமாக ஒரே தூக்காக தூக்கி வீசும்.
காளியின் இந்த கோரதாண்டவத்துக்காகவே கேமிராக்கள் பலவும் காத்திருக்கும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு பெரும் புரட்சிக்கு பின்னர் நீக்கப்பட்டது.
அப்போது இந்த காளி, காளி அம்மன் சிலை மண்டியிட்டு வணங்கிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. ஜல்லிக்கட்டுகள் அனைத்திலும் திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்த காளி உடல்நலக் குறைவால் நேற்று முன் தினம் காலமானது.
மறைந்த காளியை தெய்வமாக போற்றும் பொதுமக்கள் அதற்குரிய சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர். தங்கள் ஊருக்கு புகழ் சேர்த்த காளியின் மரணம் திண்டுக்கல் பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.