திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு... மீண்டும் தொழில் பொலிவு பெறுமா?
திண்டுக்கல்: பூட்டுத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த திண்டுக்கல் மெல்ல மெல்ல அதன் பெருமையை இழந்துவிட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கி ஆறுதல்படுத்தியிருக்கிறது மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் பரட்டை ஆசாரி என்பவரால் திண்டுக்கல்லில் பூட்டு முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் உள்ளிட்ட பல இடங்களில் அங்கிங்கெனாதபடி பூட்டு தொழிற்சாலைகள் குடிசைத் தொழிலாக கொடி கட்டிப் பறந்தன.
விதம் விதமான பூட்டுகள் திண்டுக்கல் மண்ணில் தயாராகின. கள்ள சாவி போட்டு பூட்டை திறக்க முயன்றால் கைகளை வெட்டும் வகையிலான தொழில்நுட்பங்களும் கூட திண்டுக்கல் பூட்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.
பியூட்டி "புல்" விநாயகர்.. சபாஷ் போட வைத்த மாணவர்கள்.. புதுச்சேரியில் புதுமை!
போட்டியால் சரிவு
சந்தையில் பெரும் மதிப்புமிக்கதாக திகழ்ந்த திண்டுக்கல் பூட்டுக்கு போட்டியாக அலிகார் பூட்டுகள் வந்தன. பின்னர் சீனா பூட்டுகள் சந்தைக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து படிப்படியாக திண்டுக்கல் பூட்டு தொழில் பெரும் நலிவை எதிர்கொண்டது.
பெயரளவில் பூட்டு தொழில்
மத்திய, மாநில அரசுகளும் திண்டுக்கல் பூட்டுத் தொழிலைப் பற்றி அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை. பெயரளவுக்கு மட்டுமே திண்டுக்கல் பூட்டு தொழில் இன்று நடைபெற்று வருகிறது. இத்தொழிலை உயிர்ப்பிக்கும் வகையில் பூட்டு தொழிலை அடிப்படையாக கொண்ட கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.
திணறி தத்தளிக்கும் பூட்டு
இந்த சங்கத்தின் முயற்சியால்தான் தற்போது புவிசார் குறியீடு திண்டுக்கல் பூட்டுக்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது திண்டுக்கல் பூட்டுத் தொழில்.
இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை
இன்று பூட்டுத் தொழிலில் குறைவான பணியாளர்களே உள்ளனர். இது தொடர்பாக ஐடிஐயில் படிப்பு இருந்தும் கூட இளைஞர்கள் மத்தியில் 'சந்தை' நம்பிக்கை இல்லாததால் பூட்டு தொழில் மீது உள்ளூர் இளைஞர்களுக்கு இன்னமும் பெரும் நம்பிக்கை வரவில்லை.
தற்போதைய புவிசார் குறியீட்டு பெருமிதத்துடன் பூட்டுத் தொழிலில் இழந்த பெருமையை மீட்டெடுக்க உரிய தரப்புகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் திண்டுக்கல்வாசிகளின் வேண்டுகோள்.