கொலைகளால் பீதி.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்... கொத்து கொத்தாக சிக்கிய 44 திண்டுக்கல் ரவுடிகள்!
திண்டுக்கல்: தொடர் கொலைகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தைப் போக்கும் வகையில் அதிரடி காட்டியுள்ளது திண்டுக்கல் போலீஸ். ஒரே நாளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 44 ரவுடிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
1980களில் தற்போதைய டிஜிபி சைலேந்திர பாபு, திண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்த போது நாகராஜ் என்ற நக்சலைட் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொடைக்கானல் டவர் குண்டுவெடிப்பு, தமிழ்நாடு மீட்சிப் படை என திண்டுக்கல் மாவட்டம் பேசுபொருளாகி இருந்தது.
2000-ம் ஆண்டுகளில் தமிழக போலீசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது திண்டுக்கல் பாண்டி என்ற ரவுடி. திண்டுக்கல் பாண்டி தலைமையிலான கூலிப்படை தமிழகம் முழுவதுமே ஆடிய ஆட்டம்தான் போலீஸுக்கு பெரும் குடைச்சலாக இருந்தது.
திமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்!
திண்டுக்கல் பாண்டி கூலிப்படை
படுகொலைகளில் எத்தனை கொடூரத்தை காட்ட முடியுமோ அத்தனையையும் காட்டியது திண்டுக்கல் பாண்டி தலைமையிலான கூலிப்படை. இந்த கூலிப்படையில் இருந்த ரவுடிகள் பின்னாளில் சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு ஏரியாவின் தாதாக்களாகவே உருவெடுத்தனர். இந்த திண்டுக்கல் பாண்டி 2010-ம் ஆண்டு என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பசுபதி பாண்டியன் கொலை
2012-ல் திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பசுபதி பாண்டியன் கொலை வழக்கு இப்போதும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூலக்கரை சுபாஷ் பண்ணையார் உட்பட 15 பேர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றனர். இப்படியான திண்டுக்கல் நகரத்துக்கும் கொலைகளுக்குமான தொடர்பு இப்போதும் நீடிக்கிறது.
பட்டப்பகலில் கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. திமுக பிரமுகர்கள் மீரான் பாய், விஜயராஜ் மீது சட்டாம்பிள்ளை தெருவில் பட்டப் பகலில் கொலை முயற்சி நடந்தது. இதில் மாஜி பெண் கவுன்சிலர் குடும்பமே சிக்கியது..
2 கொலைகள் -2 தலைகள் துண்டிப்பு
இதனைத் தொடர்ந்து பசுபதி பாண்டியன் கொலை சம்பவத்தில் இன்பார்மராக இருந்த நந்தவனப்பட்டி நிர்மலா தேவி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டு பசுபதி பாண்டியன் வீடு முன்பாக வைக்கப்பட்டது. நிர்மலா தேவியின் கொலை நடந்த அன்று இரவே அனுமந்தராயன் கோட்டையில் ஸ்டீபன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது தலையும் துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள் கூலித் தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்றனர்.
சிக்கிய 44 ரவுடிகள்
இத்தகைய தொடர் சம்பவங்கள் தொடர்பாக நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம். திண்டுக்கல் நகரம் கொலைகளின் நகரமாகிறதா? இத்தகைய சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் இரவோடு இரவாக சினிமா பட பாணியில் ரவுடிகளை தேடும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 560 ரவுடிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் 44 பேர் திண்டுக்கல் மாவட்ட ரவுடிகள். திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன் தலைமையிலான போலீஸ் படையினர் ரவுடிகளை கைது செய்திருப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.